Friday, September 9, 2011

அரசாங்கத்தின் நல்லிணக்க முன்னெடுப்பு:அமெரிக்க செனட்டின் ஆதரவைப்பெற முயற்சி!

Friday, September 09, 2011
அமெரிக்காவில் வாழும் இலங்கை மக்கள் தங்கள் நாட்டில் நடைபெறும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க செனட் சபையின் அங்கத்தவர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்கவுள்ளார்கள்.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராக இருக்கும் ஜாலிய விக்கிரமசூரியவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் இலங்கை மக்கள் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு இப்போது புனர்வாழ்வளித்து வருவதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டை இப்போது பாரிய ரீதியில் அபிவிருத்தி செய்கின்றது என்ற உண்மையை அமெரிக்காவின் செனட் சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துரைப்பதென்று முடிவெடுத்துள்ளார்கள்.

இலங்கைத்தூதுவர் அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை லொஸ் ஏஞ்சல்சில் உள்ள இலங்கையின் இணைத்தூதரகத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இப்போது அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த ஜாலிய விக்கிரமசூரிய, இலங்கை மக்கள் அமெரிக்காவின் வாக்குரிமை பெற்றவர்கள் என்ற முறையில் அந்நாட்டின் காங்கிரஸ் சபையின் அங்கத்தவர்களை இந்தக் கருத்தை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தூதுவர் அமெரிக்காவில் வாழும் முன்னணி தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். தற்போது நாடு அரசியல் மற்றும் பொருளாதார துறையில் முன்னேற்றமடைந்திருப்பதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2009 மே மாதத்தில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் வலுவூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவற்றுக்கு செவிமடுத்த தமிழ் சமூகம் அரசாங்கம் மேற்கொள்ளும் நற்பணிகளை வரவேற்பதாக கூறியது. வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக வருடாந்தம் இலங்கை அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர்களை செலவிட்டு வருகிறதென்று தெரிவித்த இலங்கை தூதுவர் இப்போது புதிய வீடுகள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகத் திட்டங்கள், பாலங்கள், ரயில் பாதைகள், நீர்ப்பாசன குளங்கள் என்பன மீள் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாககவும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இப்போது அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் புதிய வாழ்வாதாரங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரில் ஒரு சிறு தொகையைத் தவிர அனைவரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். வடபகுதியில் எல்.ரி.ரி.ஈ. தரையில் புதைத்த 5 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாகவும் தெரிவித்த ஜாலிய விக்கிரமசூரிய, இன்று நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை வளர்ச்சியடைவதாகவும் வடக்கில் 2010ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 21சதவீதத்தை எட்டியிருக்கிறதென்றும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் தாங்கள் இலங்கையில் வந்து வர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தூதுவர், அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் என்று கூறினார்.

இலங்கை அரசாங்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்.ரி.ரி.ஈ சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தும் இருக்கிறது.

இத்துடன் அரசாங்கம் 11ஆயிரத்து 600 எல்.ரி.ரி.ஈ.யினருக்கு பொது மன்னிப்பை அளித்திருக்கிறதென்று தெரிவித்த இலங்கை தூதுவர், வேறொரு நாட்டில் பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். இந்நிகழ்வில் சுமார் 30 பெளத்த பிக்குமாருக்கு தானமும் வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இலங்கை மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொண்டார்கள்.

இலங்கையின் இறைமையை பாதுகாக்க சீனா ஆதரவு பிரதமர் தி.மு. ஜயரட்னவிடம் உறுதிமொழி!

Friday, September 09, 2011
விரைவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதென்று சர்வதேச ரீதியில் விசாரணையொன்றை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவர எவராவது முயற்சி செய்தால் இலங்கையின் இறைமையை பேணிப் பாதுகாப்பதற்கு சீனா தன்னுடைய முழு ஆதரவையும் நல்குமென்று உறுதியளித்துள்ளது.

சீனாவிற்கு சென்றிருந்த பிரதமர் டி.எம். ஜயரத்னவை சந்தித்த போது அந்நாட்டின் முக்கிய தலைவர்களின் ஒருவரான கூ பெங்குவா இவ் உறுதிமொழியை அளித்தார். இலங்கை பிரதமர் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்ற சீனாவின் 15 சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தக கண்காட்சியிலும் கலந்து கொண்ட சந்தர்ப்பத்திலேயே சீனாவின் இந்தத் தலைவர் உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கை தனது தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும் தன்னுடைய நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் சீனா தொடர்ந்தும் உதவி செய்யுமென்று கூ பெங்குவா உறுதியளித்தார்.

சீனா இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பது குறித்து பெருமை படுகிறதென்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் சிறப்புற்று விளங்குகிறதென்றும் கூ பெங்குவா இலங்கை பிரதமரிடம் தெரிவித்ததாக சின்யுவா செய்தி சேவை அறிவித்தது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் கொண்டுவரப்படும் என்ற தகவலை அறிந்த பின்னரே சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கூ பெங்குவா இந்த கருத்தை தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு சர்வதேச உரிமைகளை பேணிப்பாதுகாக்கும் அமைப்பு என்ற வகையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை குற்றச் செயல்களை விசாரணை செய்யும் இலங்கையின் உள்ளூர் விசாரணைகள் சரியான முறையில் நடைபெற வில்லையென குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 7, 2011

டெல்லி தாக்குதலுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம்!

Wednesday, September 07, 2011
டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலும் தமது கவலையை வெளியிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் இதுவரையில் 10 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளதோடு 60 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்கள் அமுல்ப் படுத்தப்படும் - நிமால் சிறிபால!

Wednesday, September 07, 2011
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்களை அமுல்ப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது இதனால் சில சட்டங்களை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அரசாங்கம் புதிதாக சட்டங்களை உருவாக்கும்.

கிறீஸ் பூதங்கள் என்பது, விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவும் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களை தடுத்து நிறுவத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரமாகும். மக்களின் அச்சத்தை போக்க காவற்துறையினரும், முப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் சட்ட ரீதியான உரிமையுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கவும்:ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, September 07, 2011
அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் பாடசாலையைச் சேர்ந்த பத்து வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறாத வண்ணம் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. புத்திக்க பத்திரண.

அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் ஜெலிஜ்ஜவல பாடசாலையைச் சேர்ந்த 10 வயதே நிரம்பிய சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு மேலும் விளக்குகையில், குறித்த பாடசாலையின் பரீட்சை மண்டபத்தை துப்புரவு செய்ய வருகை தந்த 10 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு மேற் கொண்டமையானது துரதிஷ்டவசமானது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் இணைந்ததாக இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததையடுத்து அது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு பாரபட்சமற்ற வகையில் அதிகபட்சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இதன்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றும் என்றார்.

ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்!

Wednesday, September 7, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, புழல் சிறையில் இருந்து இன்று காலை வேலூர் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கருதி கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால், புழல் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில்தான் உள்ளனர். அவர்களுக்கு வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே, தங்களது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து மூவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். மூன்று பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற, 8 வாரத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

அவர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த நளினி, இன்று காலை திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

காலை 8 மணியளவில் நளினியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். இதனால், காலை முதல் புழல் சிறை பரபரப்பாக காணப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நளினியை வேலூருக்கு திடீரென மாற்றியதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

Monday, August 29, 2011

யாழ். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தெரிவிக்க தமிழில் விண்ணப்பங்கள்!

Monday, August 29, 2011
யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதில் காணப்படும் மொழிப்பிரச்சினையை நீக்கும் முகமாக பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கவாறான படிவங்கள் பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.டி தளுவத்த பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது

தற்போது, பொது மக்கள் தமது பிரச்சினைகளை தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, August 25, 2011

அவசரகால சட்டம் நீக்கம்!

Thursday, August 25, 2011
இலங்கையில் தற்போது நடைமுறையில் அவசரகால சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை மேற்கொள்வார் என இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டதனாலும், இலங்கையில் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.

அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்புமற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காத விடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலைகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.

இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அவசரக்காலச்சட்டத்தை நீக்கவுள்ளதாகவும், இதனை இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவிக்ககூடும் எனவும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள

வடக்கில் 40 ஆயிரம் மக்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை!

Thursday, August 25, 2011
வடக்கில் வாழ்ந்து வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள்; இதுவரை நிரந்தர வீடுகள் இல்லாமல் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுகிறது என சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் மஹேஸ் ஜோனி தெரிவித்துள்ளார்.

சில குடும்பங்கள் தாமே அமைத்து கொண்ட கூடராங்களில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் தற்போது வட பகுதி மக்களை மறந்துள்ளன. இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணிகளை அரசாங்கத்தினால் மாத்திரமே தனியாக செய்ய முடியாது எனவும் மஹேஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, August 16, 2011

(பத்மநாபா EPRLF) தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கண் மருத்துவ சிகிச்சை முகாம்!

Tuesday, August 16, 2011
(பத்மநாபா EPRLF) தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கண் மருத்துவ சிகிச்சை முகாம்! முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.

திருகோணமலை கும்புறுபிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் மதியம் திருகோணமலை 6ம் கட்டை மெதடிஸ்ட் மிஷன் சிறுவர் பாடசாலையிலும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சக்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டுக் காலத்து நினைவுகளை கலந்து கொண்ட மக்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.
(பத்மநாபா EPRLF)

புதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர்!

Tuesday, August 16, 2011
இந்திய அரசாங்கமானது தற்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ள செயற்பாடுகளுக்கும் தமது உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று(ஆகஸ்ட்- 15) தெரிவித்தார்.

இந்திய உயஸ்தானிகர் அலுவகத்தில், 65 ஆவது இந்தி சுகந்திரத்தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அழகிய நாடான இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்ந்துவருவதாகவும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பல நிகழ்வுகள் மூலம் உறுதியான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெவித்தார்
இந்தியாவின் பாரியதொரு முதலீடு மூலம், திருகோணமலை சம்பூர் பிரதேத்தில் 500 மெகாவோட் அனல் மின் உற்பத்தி செயற்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தலைமைத்துவம் மற்றும் இலங்கை மக்களாலுமே இவ்விரு நாடடுகளுக்கு இடையில் சிறந்த நட்புறவு பாலம் எற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, August 5, 2011

செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் - LLRC

Friday, August 5, 2011
செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் அண்மையில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையில் அந்தத் தகவல்களை உள்ளடக்குவது என தீர்மானித்துள்ளது.

இந்த ஆவணப்படம் தொடர்பில் ஆய்வு நடத்தும் விசேட நிபுணர்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட மாட்டாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகத்தினால் கடந்த முறை வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை ஆய்வு செய்த நிபுணருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் அதனால் இம்முறை நிபுணரின் பெயரை வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய ஆவணப்படத்தை நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும், அதனை விசாரணை செய்து இறுதி அறிக்கையில் தரவுகள் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது – சுபினேய் நான்டி!

Friday, August 5, 2011
வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நான்டி தெரிவித்துள்ளார்.

எனினும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவது தொடர்பில் பல்வேறு சவால்கள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு நான்டி விஜயம் செய்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அவர் நேரில் கேட்டறிந்து கொண்டார்.

அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கனை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஜகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்து நடவடிக்கை எடுக்க முடியாது-ஜெர்மன் தூதுவர் மடுவேகெதர!

Friday, August 5, 2011
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய வெளிநாட்டு இராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கான இலங்கையின் பதில் தூதுவராக செயற்பட்டு வரும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்தின் பொது நிர்வாக அமைச்சில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்துடனான யுத்தம் நிறைவுக்கு வந்தப் பின்னர் ஜெகத் டயஸ் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன் பின்னர் ஜெனர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்துக்கான பதில் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.

ஜெகத் டயஸ் இராஜதந்திர மட்டத்தில் தொழிற்படுவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர பீபீசியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 57வது படைபிரிவிற்கு கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், யுத்தக் குற்றம் புரிந்தார் என சுவிட்ஸர்லாந்தின் தொலைக்காட்சி சேவையொன்று அண்மையில் காணொளி ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 26, 2011

குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!
Tuesday, July 26, 2011
கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன. அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன யுத்தப்பிரபுக்களால் இனவெறியும் கொலைவெறியும் ஊட்டப்பட்ட இராணுவ வீரர்கள் யுத்தகளத்தில் பைத்தியக்காரர்களாக அல்லாமல் வேறென்னவாக இருந்திருப்பார்கள்.
ஒரு புறம் சிங்கள வெறி ஏற்றப்பட்ட படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.

கரணம் தப்பினால் மரணம் என தனது எதிரிப்படைகள் பற்றிய பயத்தோடு முன்னேறுகிற எந்த இராணுவமாக இருந்தாலும் அல்லது எதிரிப்படைகளிடமிருந்து தான் தப்பினாற் போதுமென தற்காப்புக்காக திணறிக் கொண்டிருக்கிற எந்த இராணுவமாக இருந்தாலும் அவை மக்களைப் பற்றியோ சர்வதேச யுத்ததர்மங்கள் பற்றியோ கவலைப்படப் போவதில்லை.
1989ம் ஆண்டு 60000க்கு மேற்பட்ட ஜேவிபி இளைஞர்களையும் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் என்று சந்தேகப் பட்டோரையும் மூன்றே மாதத்தில் கொன்றொழித்ததுவும் இதே சிறிலங்கா இராணுவமும் பொலிஸ_ம்தான். அப்போது இந்த புலிப்பிரமுகர்கள் யாரும் மனித மீறல் யுத்தக்குற்றம் போன்ற எதனையும் எழுப்பவில்லையே. மாறாக அப்போது அரசுக்குத் தலைமை வகித்த ஜனாதிபதி பிரேமதாசாவுடன் புலிகள் தேன்நிலவல்லவா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எத்தனை நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தென்னிலங்கை நகரங்களில் ரயர்களில் கொழுவி விடப்பட்டு கொழுத்தப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் தொகை தொகையாகச் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். ஜேவிபியின் தலைவர் ரோஹண விஜேவீராவும் உயிரோடு பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு பின்னர் கனத்தை மயானத்தில் உயிரோடு தகனம் செய்யப்பட்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதாலா, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சர்வதேச அரங்கில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை, அதைப்பற்றி தமிழர்கள் எந்தவித கவலையோ அக்கறையோ கொள்ளவில்லை. அவையும் மானிட இனத்துக்கு எதிரான குற்றங்கள்தானே! தனக்கு வந்தால்த்தானா தலையிடியும் காய்ச்சலும் வலிக்கும்!
நாங்கள் உலகத்துக்குப் பொதுவான நீதிநியாயங்களை எமது வசதி கருதி புறக்கணித்து இருந்தால் எமது சமூகத்துக்கான நீதிநியாயங்களும் உலகத்தாரால் அவரவரது வசதிக்கேற்றபடி புறக்கணிக்கப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பதன் அர்த்தம் என்ன! நல்லார் ஒருவரும் இலரேல் அந்த சமூகத்தவருக்கு மழையே கிடைக்காது என்பதுதானே!

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்பதன் அர்த்தமென்ன! வெறும் புல்லுகள் மட்டுமே இருக்குமாயின் அந்த புல்லுகலுள்ள பாத்திகளுக்கு எந்த வாய்க்காலாலும் நீர் வழிந்தோடி புசிய எவரும் விட மாட்டார் என்பதுதாளே! எனவே எல்லார்க்கும் பொதுவான நீதி நியாயங்களின் நியதிகளைப் புறக்கணித்து சுயவசதிக்கேற்றவாறு வக்காலத்து வாங்கும் புத்திஜுவிகளைக் கொண்ட சமூகத்துகக்கு அதற்கு அவசியமானபோது நீதிநியாயம் கிடைக்க யாரும் துணை நிற்க மாட்டார்கள் என்பதையே இந்தப் பொன்மொழிகளில் இருந்து புதரிந்து கொள்ள வேண்டும்.

1986ம் ஆண்டு மேமாதம் சிறீ சபாரத்தினம் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்களே! பல இளைஞர்கள் சந்தி சந்தியாக வைத்து மக்கள் முன்னிலையில் உயிரோடு எரிக்கப்பட்டார்களே! அப்படிக் கொலை செய்தவர்கள், அதற்குத்துணையாக நின்றவர்கள் எனப் பலர் இப்போது மேலைத் தேய நாடுகளில் வசதியாக வாழுகிறார்களே! அவர்களைத் தேடிப் பிடித்து சர்வதேசக் குற்றவாளிக்; கூண்டிலே நிறுத்த வேண்டும் என யாரும் குரலெழுப்பவில்லை. அப்போது கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் ரெலோ உறுப்பினர்கள் என்பதாலா அவர்களது உயிர்களுக்கு மதிப்பில்லை? ஆல்லது அந்தக் கொடூரங்களைச் செய்தவர்கள் தமிழ்ப் புலிகள் என்பதால் அந்தக் கொலைகள் சர்வதேசத்துக்கு நீதியான கொலைகளாகி விட்டனவா?
1986ம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கிலும் கிழக்கிலும்; பல நூற்றுக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்களைக் தைது செய்த புலிகள் அவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் சதோதரங்களின் முன்னால் வைத்து வெட்டிக் கொலைகள் செய்தார்கள், கட்டி வைத்து சுட்டுக் கொலைகள் செய்தார்கள்! மரங்களில் தலை சிதற அடித்துக் கொலைகள் செய்தார்கள், வாகனங்களில் கட்டி றோட்டு றோட்டாக இழுத்துச் சென்று அந்தத் தோழர்களின் சதைகள் நசிந்து கிழி;ந்து பிஞ்சு துண்டு துண்டாக வீதிகளில் கொட்டக் கொட்டக் கொலைகள் செய்தார்களே! அதெல்லாம் என்ன மானுட இனத்துக்கு நன்மை செய்வதற்காக தமிழ் மாவீரர்கள் நடாத்திய சர்வதேச சாகசங்களா!

1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கந்தன் கருணை இல்லத்தில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த ஏனைய இயக்கங்களின் அறுபத்து மூன்று உறுப்பினர்களை அடைத்த கூண்டுக்குள்ளேயே வைத்து புலிகளின் தலைவர்கள் சில வினாடிக்குள் சுட்டுப் பொசுக்கி பெற்றோரும் காணா வகையில் எங்கேயோ புதைத்தார்களோ! அந்தப் புதைகுழிகளை இன்று யார் தேடிக் காட்டுவார்! அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானுட இன விரோத குற்றம்தானே!

1990ல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் புலிகளால்; பிடிக்கப்பட்டு மிகக் கொடூரமாக சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களே அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானிட இனத்துக்கு எதிரான குற்றங்களே! அந்தக் குற்றங்கள் திறந்ததொரு நீதி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு உரிய நீதிமன்றங்களின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும் என்று இன்று வரையிலும் எந்தவொரு மனித உரிமைக்காரர்களாலும் எழுப்பப்படவில்லையே! ஏன் அந்தத் தமிழர்கள் வடக்;கு கிழக்கு மாகாண சபைக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் ஆதரவாக இருந்தார்கள் என்பதனால் அவர்கள் கொல்லப்பட வேண்டிய மானுட விரோதிகளா?

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் திகதி தோழர் பத்மநாபாவும் அவரோடு அங்கிருந்த தோழர் கிருபாகரன், தோழர் யோகசங்கரி, தோழர் கமலன் என பதின்மூன்று பேரை அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் சென்னை நகரத்தில் வைத்து ஒரு சில நிமிட நேரங்களுக்குள் படுகொலை செய்தார்களே! அந்தக் கொலைகள் என்ன யுத்தகள சண்டையிலேயா நடைபெற்றன. ஆயுதமற்று இன்னொரு நாட்டில் இருக்கையில்த்தானே கொலை செய்யப்பட்டார்கள். அந்தக் கொலைகளின் நேரடிக் காட்சிகள் படம் பிடிக்கப்படவில்லை என்பதாலா அவை சர்வதேச குற்றங்களாகவில்லை!
மேலே கூறப்பட்டுள்ள குற்றங்களை நிகழ்த்திய சர்வதேசக் குற்றவாளிகள் பலர் இன்னமும் மேலைத்தேய நாடுகளில் அகதி அந்தஸ்த்து பெற்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே! அவர்களை சர்வதேச பொலிஸ் அமைப்பானது பட்டியலிட்டு எந்தநாட்டில் இருந்தாலும் கைது செய்து சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று இதுவரை எந்த மனித உரிமைக்காரரும் கேட்கவில்லையா! ஏன்?

1990ம் ஆண்டு ஒரேநாளில் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போரின் எந்தவொரு பக்கத்தாரும் ஒரு மக்கள் சமூகத்தை அந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக அவர்களது வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றுவது சர்வதேச சட்டப்படி மானுட இனத்துக்கு விரோதமான சர்வதேசக் குற்றமே!. இங்கு முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுமல்ல அவர்களது அசையும் அசையாச் சொத்துக்களெல்லாம் புலிகளால் சூறையாடப்பட்டன. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா இந்த மாபெரும் மானுடக் கொடூரம் பற்றி மனித உரிமைக்காரர்கள் அவற்றைத் தெரிந்தும் தெரியாதது போல இருந்து விட்டார்கள்!

நீதி என்பதை தமிழனுக்கு ஒன்றாகவும் சிங்களவனுக்கு ஒன்றாகவும் கொள்வது மானுட நாகரீகமாகாது. சிறி லங்கா அரசையும் சிங்கள இனவாதிகளையும் குற்றம் சாட்டும் நாம் தமிழர்கள் மத்தியில் இருந்த சக்திகள் என்ன செய்தன என்பதிலும் நீதியான நியாயங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நீதி என்பது பிரபஞ்சமயமானது. அது எங்கும் எப்போதும் ஒரு தளத்தையே கொண்டதாகும். அது இன மத தேச எல்லைகளைக் கடந்த ஒன்றாகும். மனித சமூகத்தின் நீதியானது மானுட நாகரீக வளர்ச்சியின் உயர்ந்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; சிறி லங்கா அரச படைகள் .சிங்கள இனத்தின் நலனுக்காக நடந்து கொண்டது போலவே புலிகள் தமிழர்களின் நலன்களுக்காக நடந்து கொண்டார்கள் என்ற நியாயத்தை எந்தத் தமிழராவது கொண்டிருப்பாராயின் அந்த வகையானோர் சிறி லங்கா அரச படைகள் மீது குற்றம் சாட்டும்
எல்லாத் தகைமையையும் இழந்து விடுவார்கள்.

வரலாற்றில் நடந்தவை தொடர்பாக “ஆல்” போட்டு அசை போடுவது சரியான ஒரு வரலாற்று ஆய்வு முறைக்கு உரியதல்ல என்பது வரலாற்று ஆசிரியர்களிடம் உள்ள பொதுவான கருத்து. இருப்பினும் இங்கு ஒரு புரிந்துணர்வின் தேவைக்காக கடந்து போய்விட்ட யுத்தம் தொடர்பாக மறுபக்கமாக ஒரு விடயத்தை :”ஆல்” போட்டுக் கற்பனை செய்து நீங்களே என்ன நடந்திருக்கும் என்றும் அது தொடர்பாகப் பார்க்கையில் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் எவ்வளவு தூரம் மானுட நீதி நியாயங்களுக்கு உட்பட்டவர்கள் எனபதையும் சிந்தித்துப் பாருங்கள்.

அதாவது, நடந்த யுத்தத்தின் முடிவில் புலிகளின் இராணுவம் அரச படைகளை விரட்டியடித்து வடக்கு கிழக்கு மாகாணங்களின்; எல்லையோரமாக உள்ள அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
• அப்படிப்பட்ட ஒரு சூழலில் புலிகளின் பிடிக்குள் அகப்பட்டிருக்கக் கூடிய ஒரு அரச படை வீரனாவது உயிரோடு விடப்பட்டிருப்பானா! இன்றைக்கு பார்க்கையில் சிறி லங்கா பரடையினரிடம் சரணடைந்த பதினோராயிரம் புலிப் போராளிகள் மீண்டும் சாதாரண சமூக மனிதர்களாக வாழ்வதற்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் நம்பிக்கைகள் அளிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறி லங்கா அரச படைகள் புலிகளைத் தொட்டால் 40000 இராணுவத்தினர் பிணமாக தென்னிலங்கைக்கு சவப்பெட்டிகளில் அனுப்பப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தவர்கள்தானே புலிகள்.
அவ்வாறு புலிகளால் கைப்பற்றப்படும் பிரதேசத்தில் எந்தச் சிங்களவரையாவது அல்லது முஸ்லிம் மகனையாவது இருக்கவிட்டிருப்பார்களா! அல்லது அந்தப் பகுதிகளில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் நேசமாக இருந்திருக்கக் கூடிய தமிழர் எவரையாவது கூட விட்டு வைத்திருப்பார்களா! எத்தனை பேரை உயிரோடு விட்டிருப்பார்கள்! அந்தச் சிங்களவர்களின் மற்றும் முஸ்லிம்களின் எந்தவொரு சிறு உடைமையையாவது எடுத்துச் செல்ல விட்டிருப்பார்களா!

அப்படிச் சிந்தித்துப் பார்த்தீர்களானால் ஒரு சட்டபூர்வமான அரச படைக்கும் ஒரு பாசிச வெறி பிடித்த பயங்கரவாதக் குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும் அந்த அடிப்படையிலேயே எமது எதிர்காலம் குறித்து எமக்கு முன்னால் உள்ள உண்மையான அவசியமான சமூகக் கடமைகள் என்னென்ன உள்ளன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

புலிகளின் ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு நடுங்கிப் போயிருந்த ஒரு பாதிரியாரை ஒரு வருடத்துக்கு முன்னர் நான் சந்தித்தேன். அவர் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆரம்ப காலங்களில் கட்சி பேதம் குழு பேதங்களுக்கு அப்பால் நின்று ஒரு உற்சாகம் தரும் மனிதராக – ஆசானாக இருந்தவர் அவரை நான் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது சொன்னேன் :”தந்தையே! நாம் ஒவ்வொருவரும் இனி கடந்த காலம் பற்றிய எல்லாவற்றையும் மறந்து விட்டு மன்னித்து விட்டு எதிர்காலத்துக்கானவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றேன். உடனே அவர் “வரதர்! நாங்கள் இவங்களை (புலிகளை) மன்னிக்க வேண்டும். ஆனால் இவங்கள் செய்ததுகளை மறக்க ஏலாது” என்று கண்ணில் நீர் ததும்ப கூறினார். அவரது நெஞ்சு எவ்வளவு கனத்துப் போயிருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது.

இப்போது நான் கூறுவது என்னவென்றால், கடந்த யுத்தத்தில் நடந்து முடிந்த குற்றங்களை – அவை எவரால் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை – எம்மால் மறக்க முடியாவிட்டாலும் குற்றம் புரிந்தவர்கள் அனைவரையும் மன்னித்துவிட்டு முன்னேற்றகரமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கைகளோடு நடைபோட வேண்டும் – நடை போடமுடியும். குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது. மாறாக அவற்றை மன்னிப்பதன் மூலம் அந்தக் குற்றங்களை இழைத்தவர்களின் மனச்சாட்சிகளை நாம் எழுச்சி கொள்ள வைத்து அழிவுகாரர்களை மக்கள் சமூகங்களுக்கான ஆக்கபூர்வமானவர்களாக ஆக்க வேண்டும்.

புலிகள் செய்த யுத்தக் குற்றங்களையும் மானுட இனத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்களையும் எப்படி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் மன்னித்தார்களோ! எப்படி அவற்றை ரெலோ உறுப்பினர்கள் புளொட் உறுப்பினர்கள் ஈ என் டி எல் எவ் உறுப்பினர்கள், ஈ பி டி பி உறுப்பினர்கள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்கள் மறந்தார்களோ மன்னித்தார்களோ! எப்படி முஸ்லிம் மக்கள் மன்னித்து விட்டார்களோ! அவை போலவே இன்று அனைத்துத் தமிழ் மக்களும் கடந்து போன யுத்தத்தில் நடந்தவற்றைத் தோண்டி கிண்டி கிளறி பரிசோதனைகள் செய்யும் எண்ணங்களை நிறுத்திவிட்டு அந்தக் குற்றங்கள் இழைத்தவர்களை மனத்துணிவோடு மன்னித்துவிடவேண்டும்.
இன்iறைக்கு தமிழர் சமூகத்துக்கு – ஏன் இலங்கை மக்கசள் அனைவருக்கும் தேவைப்படுவது –
• ஜனநாயக அரசியற் பண்பாடு;,
• சுயகௌரவமான வாழ்வு,
• சுதந்திரங்கள் நிறைந்த சூழல்,
• சமத்துவமான சமூக நீதிகள்,
• சகோதரத்துவமான இனமத உறவுகள்;,
• செழிப்பான சமூக பொருளாதார முன்னேற்றம்
இந்த ஆக்கபூர்வமான இலக்குகளை ஏந்தியபடி ஈழத்தமிழ் மக்கள் முன்னோக்கி நடைபோட வேண்டும். என்பதை எமது விருப்பமாகக் கொள்ள வேண்டும்.
அதை நோக்கி நாம் எல்லோரும் நம்பிக்கையோடு செயற்பட வேண்டும்.

இப்படிக்கு
உங்கள் அன்புத் தோழன்
அ.வரதராஜப்பெருமாள்

Monday, July 18, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி-4.

Monday, July 18, 2011
ததேகூக்காரர்கள் உண்மையில் இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியற் சூழ்நிலைகளை ஆண்டுநிற்கும் உள்நாட்டு வெளிநாட்டுக் காரணிகள் அனைத்தையும் தமது கணக்கில் சரியாக எடுத்துக் கொண்டு அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியற் தீர்வினை எப்படியாயினும் நடைமுறைக்குக் கொண்டு வ்நதுவிட வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைக் களத்தில் செயற்பட வேண்டும். அதன்மூலம் -

காரிய ஆற்றல் கொண்ட ஒரு மாகாண ஆட்சியை வடக்கு கிழக்கில் செயற்பட வைக்க வேண்டும்
வடக்கு கிழக்கில் மாகாண ஆட்சியின் கீழான சிவில் நிர்வாகங்களை முறையாக ஆக்கி அவை திறம்பட மக்கள் சேவைகளை ஆற்றும் நிலையை ஏற்படுத்த வேண்டும்,
யுத்தத்தால் சிதைந்து போன எமது மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மீளக் கட்டியெழுப்பி மக்கள் பட்ட துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு அவர்கள் உடலாலும் மனதாலும் மீண்டும் வலிமை பெறும் நிலை ஏற்படுவதற்கான அடிப்படைகளை ஆக்க வேண்டும்,

யுத்தத்தால் சீரழிக்கப்பட்டுப் போய்க்கிடக்கும் எமது வடக்கு கிழக்கு தேசத்தின் பொருளாதாரம், சமூகசேவை மற்றும் நிர்வாக உட்கட்டுமானங்களை எல்லாம் அதிவிரைவாகக் கட்டியெழுப்பும் ஆட்சி யொன்று மாகாண மட்டத்தில் செயற்பட வகை செய்ய வேண்டும்,
எமது வடக்கு கிழக்கு தேசத்தில் மீண்டும் விவசாயமும் மீன்பிடியும் கால்நடை வளர்ப்புகளும் செழிப்புற வைக்கும் மாகாண ஆட்சி ஒன்று செயற்பட வேண்டும்,
எமது தேசத்தில் புதிய காலத்துடன் தொடர்பான தொழில் வளர்ச்சிகள் மற்றும் சேவைத்துறை வளர்ச்சிகளை எழுச்சி பெற வகை செய்யும் மாகாணத் தலைமையொன்று அரசியல் அதிகாரத்தடன் செயற்பட வேண்டும்
எமது தேசத்தில் சட்டம், ஒழுங்கு, நீதி, மானுட உரிமைகள், தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை நிலை நாட்டுவதில் காத்திரமான பங்கைச் செலுத்துகின்ற மாகாண மக்களாட்சியை நிலைநாட்ட வேண்டும்;.

இந்த இலக்குகளை அடையும் வகையான ஏற்பாடுகளே இன்றைய இலங்கைத் தமிழ் மக்களின்
அபிலாஷைகளிற் பிரதானமானவைகளாகும்- இவற்றை சமாதானமான முறையில் அடைவதற்காகவே அரசுடனான சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் பயன்பட வேண்டும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது சில கட்சிகளுக்கு மட்டுமே உரிய அரசியல் வேலைத்திட்டமல்ல. மாறாக அந்தத்தீர்வை வேண்டி நிற்கும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சமூக அரசியல் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அந்த இயக்கத்தை முன்னெடுக்கும் கடமையையும் தலைமைப் பொறுப்பையும் தற்போது தமிழ் மக்கள் ஜனநாயக பூர்வமாகவும் சட்ட ப+ர்வமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடமே பிரதானமாக ஒப்படைத்திருக்கிறார்கள்.

மக்களின் பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பொது அபிலாஷைகள் தொடர்பாக எப்போதும் அக்கறையோடிருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொதுமக்களிற் சிலரோ அல்லது தமது ஆதரவாளர்களிற் சிலரோ தமது நியாயமான முயற்சிகளுக்கோ, சரியான அரசியல் முன்னெடுப்புகளுக்கோ தடைக்கட்டை போடுபவர்களாக செயற்படுவதை அனுமதிப்பது ஒரு பொறுப்பான அரசியல் சமூகத் தலைமைக்கு அழகுமல்ல சரியுமல்ல.

தலைவர்கள் தமது முன்னெடுப்புகளும் முயற்சிகளும் நியாயமானவை முறையானவை மக்களின் பொது நலன்களுக்கு அவசியமானவை என்று தாம் கண்டு துணிந்தால், அதன்பின்னர் அவை தொடர்பாக பொது மக்கள் மத்தியிலோ தமது ஆதரவாளர்கள் மத்தியிலோ குழப்பம் ஏதும் நிலவும் இடத்து அவர்களுக்கு தமது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள் பற்றியும் தமது முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் பகிரங்கமாகத் துணிந்து தெளிவுபடுத்தி தமது ஆதரவாளர்களையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் தம்மோடு துணையாக அணைத்துச் செல்லல் வேண்டும் - வழி நடத்திச் செல்லல் வேண்டும்.

ததேகூவினர் அரசுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் முறைகள் மற்றும் வகைகளை அவதானிக்கின்ற போதும், அவை தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாக விடுக்கும் அறிக்கைகளை நோக்குகின்ற பொழுதும் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய அரசியல் பொருளாதார சமூக காலவர்த்தமான நியதிகள் நியாயங்களைக் கணக்கிலெடுத்து அவசியமானதும் அவசரமானதுமான அரசியற் தீர்வைக் காண்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

மாறாக,

தங்களுக்குள் ஒருவரையொருவர் வெட்டியோடும் போக்கைக் கொண்டிருப்பது தெரிகிறது.
வெளிநாடுகளில் இருக்கும் தமிழீழத் தீவிரவாதிகளையும் உள்நாட்டில் இருக்கும் அரச எதிர்ப்புவாதிகளையும் திருப்திப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவதே தெரிகிறது.
அரசியற் தீர்வொன்றை எட்டுவதில் காட்டப்படும் அக்கறையை விட அதிகமாக இந்த பேச்சுவாத்தைக் களம் மூலம் வெவ்வேறு வகையான தனிப்பட்ட அரசியல் பொருளாதார லாபங்களில் அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறப்படுவதை, அப்படியல்ல என்று மறுப்பதற்கான நியாயங்களை ததேகூகாரர்கள் தருவதாக இல்லை.

தமிழர்கள் பூரண திருப்தியோடு இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக முன்வந்து மனமுவந்து அங்கீகரிப்பதற்குத் தயாராக இல்லை என்று கண்டு பிடிப்பதற்கு பெரிய கற்றறிவும் நீண்ட பட்டறிவும் அவசியமில்லை.

அதை மீண்டும் மீண்டும் குழறிக் குழறிச் சொல்வதற்கு ஒரு கெட்டித்தனமும் தேவையில்லை. மக்கள் தமது பொன்னான வாக்குகளை நேரம் மினக்கெட்டு போட்டு தலைவர்களை தெரிவு செய்தது இந்தப் புழுத்துப்போன புண்ணாக்கு அறிக்கைகளை விடுவதற்காகவா?

தமிழர்கள் பூரண திருப்தியோடு ஏற்கக் கூடியதோர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக மனமுவந்து முன்வந்து தரத் தயாராக இருப்பார்களேயானால் இந்தப் பேச்சுவாத்தை சுற்றுக்கள் எவையும் அவசியமற்றவை அல்லவா!

மஹிந்த சிந்தனையாளர்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்குமிடையில் பெரியதோர் இடைவெளி இருப்பதால்தானே அவை தொடர்பான அரசியற் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன! அதனாற்தானே இந்திய அரசு இலங்கை அதிபருக்கு அரசியல் தீர்வு பற்றி சொல்ல வேண்டியேற்படுகிறது. இந்தச் சூழலின் விளைவாகத்தானே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அரசியற் தீர்வ தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை அவசியமாக்கியுள்ளது.

அரசியற் தீர்வுக்காக பேச்சுவார்த்தை என்னும் நடைமுறையைக் கடைப்பிடிப்பது அரசியல் விஞ்ஞானத்தில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பிரதானமான பாகம். சர்வதேச அனுபவங்களினூடாக இந்த நடைமுறையை பிரயோகிப்பது தொடர்பில் பல கோட்பாடுகளும் தேற்றங்களும் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை என்பது பல நடைமுறை நுட்பங்கள் நிறைந்த ஒரு கலை.

கருத்துக்கள் – நிலைப்பாடுகளின் வேறுபாடுகளைக் கொண்டவர்களிடையே நடைமுறைச் சாத்தியமான பொதுக் கருத்துக்களை – பொது நிலைப்பாடுகளைச் சித்தி பெறச் செய்வதற்கான சமரசங்களை நிலைநாட்டும் சமாதானமான முறையே பேச்சுவார்த்தை.

பேச்சுவார்த்தை என்னும் வழிமுறையைக் கடைப்பிடிப்பதில் ரகசியங்களும் பரகசியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன.

ஒரு பேச்சுவார்த்தையில் எந்தளவுக்கு ரகசியங்கள் பேணப்பட வேண்டும்.
எந்தெந்த விடயங்களில் எந்தெந்த அளவுக்கு மேல் ரகசியம் கட்டாயமாக்கப்படக் கூடாது,
எந்த அளவுக்கு பரகசியம் தவிர்க்க முடியாதது என்பன
என்ன விடயங்கள் பேசப்படுகின்றன,
யார் தொடர்பாகப் பேசப்படுகின்றன.
யார்யாருக்கிடையில் பேசப்படுகின்றன.
என்பவற்றோடெல்லாம் சம்பந்தப்பட்டவையாகும்.

தனிப்பட்ட வியாபாரிகள் தங்களுக்கிடையில் பேரம் பேசுவதில் ரகசியங்கள் பேணப்படலாம். அது அவசியமாகவும் இருக்கலாம். அது தனிப்பட்ட இரு பகுதியினரின் லாப நட்டங்களோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும். ஆனால் பொது மக்களின் பொது விவகாரங்களில் வேறுபாடுகளினிடையே ஒற்றுமைகளைச் சாதிப்பதற்கென நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்; போது ரகசியம் என்பது அதற்கு மிகவும் அவசியமான குறைந்த பட்ச எல்லைக்கு மேல் பேணப்பட்டால் அந்த ரகசியம் பேணலானது பேச்சுவார்த்தை மூலம் அடையப்படவென முயற்சிக்கும் இலக்குகளுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்;.

அரச பிரதிநிதிகளும் ததேகூவினரும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எட்டுத் தடவைகள் சந்தித்த போதும் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்ற கேள்விகளுக்கு அவை ரகசியங்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் சந்திப்புக்கள் முடிந்த ஒவ்வொரு கட்டத்திலும் இரு பகுதியினரும் வெளியிட்ட கருத்துக்களை உற்று நோக்கி ஆய்பவர்களுக்கு இங்கு நடந்து முடிந்த சுற்று சந்திப்புகளில் எதுவும் பேசப்படவில்லை என்பது பரகசியமாக உள்ளது.

அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட அத்தனை தமிழ் இளைஞர்களினதும் பெயர்பட்டியலை அரசிடமிருந்து எடுக்காமல் விடமாட்டோம் என பகிரங்க சவால் விட்டார்கள். ஆனால் எட்டுத் தரம் சுற்றியும் ஒரு துண்டு பட்டியலையும் பெற்றதாக இல்லை.

ஆறு சுற்று சந்திப்புக்களுக்குப் பின்னர் ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை ததேகூவினர் அரசிடம் முன்வைத்திருப்பதாக ஊடகங்களில் கசிந்தன. அதில் எத்தனை அரசால் ஏற்கப்பட்டது எத்தனை அரசால் முற்றாக நிராகரிக்கப்பட்டது, எத்தனை விடயங்களில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காண வாய்ப்புக்கள் உள்ளன என அடையாளம் காணப்பட்டது என்றால் எதுவுமே நடக்கவில்லை.

ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை பேப்பரில் அச்சடித்து ரகசியமாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு கடித உறையும் ஜனாதிபதி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வர ஒரு ஆளும் போதுமே. இதற்காகவா ஐந்து தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஆறு தடவைகள் சுற்றிச் சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்!

பின்னர் பன்னிரண்டு அம்சத் திட்டம் ஒன்றை அரசாங்கம் எட்டாவது சுற்றில் முன்வைக்கவுள்ளது என்றார் ததேகூவின் சட்டப் பேச்சாளர்.

எட்டாவது சுற்றில் எதுவுமே தரவில்லை என்று சொல்லிக் கொண்டு கைவீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு என வீடு நோக்கி விட்டார்கள்.

2010 நவம்பரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டதால் 2011 ஜூன் வரை அரசாங்க பிரதிநிதிகளும் ததேகூ பிரதிநிதிகளும் எட்டுத் தடவைகள் சந்தித்தார்கள்.

2011 ஜூனில் இந்திய உயர் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் நிருபமாராவ் ஆகியோர் இலங்கை விஜயம் செய்து ஜனாதிபதியைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி அரசியற் தீர்வைக் காணும் கடமையை பாராளுமன்ற தெரிவுக் கமிட்டியொன்றிடம் விட்டுவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதன் மூலம் ததேகூவுடன் அரசியற் தீர்வுக்காக நடக்கும் சந்திப்புக்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான முத்தாய்பபை வெளியிட்டுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.

ஆக மொத்தத்தில் புலியில்லா யுகத்தில் அரசு மற்றும் தமிழர் பிரதிநிதிகளுக்கு இடையே முதலாவது கட்டமாக எட்டுச் சுற்றுக்களாக நடந்த சந்திப்புக்கள் அரசியற் பேச்சுவார்த்தையென எதுவும் இல்லாமலே இந்தப் படக் காட்சி முற்றும் என முடிந்து விட்டதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர் சுற்று இனி எப்போது என்பது மிக விரைவில் பலராலும் எதிர்பார்க்கப்படவுள்ளது.

அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கம் இடையே சந்திப்புக்கள் தொடர்ந்து இருப்பது அவசியமாகும்.

சந்திப்புக்களின் போது உடன்பாடான விடயங்கள் எவையெவை என்பதுவும், நிலைப்பாடுகள் ரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் எவையெவை என்பதுவும், முரண்பாடாக உள்ள விடயங்கள் எவையெவை என்பதுவும
திட்டவட்டமாக அடையாளம் காணப்பட வேண்டும்.

ஒரு பேச்சுவார்த்தை செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அப்பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்திலேயே வேறுபாடான விடயங்களையோ அல்லது முரண்பாடான விடயங்களையோ அந்தப் பேச்சுவார்த்தை தொடரின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை கொண்டவையாக ஆக்கக் கூடாது,

எனவே முதலில், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இருபகுதியினரும் என்னென்ன விடயங்களிலெல்லாம் உடன்பாடாக உள்ளனரோ அந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை முறையாக நிரல்படுத்தி ஓர் உடன்பாட்டு வரைவாக ஆக்க வேண்டும்.

அடுத்து, நிலைப்பாட்டுரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் தொடர்பாக முதலில் அரச பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று சமரசங்கள் காணப்படல் வேண்டும். புரிந்துணர்வும் நம்பிக்கைகளும் விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் சமரசம் காண முடியாது.

அதன்பின்னர், இருபகுதியினரிடையேயும் முரண்பாடானதாக உள்ள – அதாவது மிகவும் சிக்கலானதும் இணக்கம் காண்பதற்கு சிரமமானதுமான - விடயங்களில் எந்த விடயங்கள் உடனடிக்கட்டாயமாக உடன்பாடு காணப்பட்டு நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு அவசியமானவை என்று அடையாளம் கண்டு அவை தொடர்பாக முடிந்தளவு இணக்கம் காண முயல வேண்டும்.

ஏனைய முரண்பாடான விடயங்களை பேச்சுவார்த்தைகளுக்காகக் காலம் தள்ளிப் பின்போட்டுவிட்டு உடன்பாடு கண்ட விடயங்களை முடிந்த அளவு விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வருவதே ஒரு பேச்சுவார்த்தையை காரியசித்தியுடையதாக ஆக்கும் அணுகுமுறையாகும்..

ஒரு சில முரண்பாடுகளுக்காக அதுவும் உடன்பாடான விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கு தடையாக இல்லாத விடயங்களுக்கு, அவை கொள்கைரீதியில் எவ்வளவுதான் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பினும், அவற்றுக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்து உடன்பாடான விடயங்கள் அத்தனையையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருப்பதென்பது பொறுப்பு வாய்ந்த சமூக அரசியற் தலைமைக்கு இழுக்காகும்.

அந்த முரண்பாடான விடயங்களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை அக்கறையற்றவைகளாக புறந்தள்ளிவிட வேண்டியதில்லை. மாறாக அவற்றை பின்னொரு கட்டத்தில் உருவாகும் பேச்சவார்த்தைக் களங்களில் பார்த்துக் கொள்ளலாம் என முனைவதே விவேகமாகும்.

சமூகங்கள் இயங்கும் வரை - சமூகங்கங்களுக்கிடையில் உறவுகள் இருக்கும் வரை அரசியலும் இயங்கும். ஒரு ஆட்சித் தலைவரோடு அவர் ஆளும் தேசமும் முடிவதில்லை – அதே ஆட்சி;த் தலைவர் கூட தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டோடு மாறாது இருப்பார் என்றும் இல்லை.

அதேபோல ஒரு தடவை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே எப்போதும் அந்த மக்கள் சமூகத்தின் தலைவர்களாக இருப்பார்கள் என்றும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாது என்பது இயற்கை. அதிலும் ஜனநாயகத்தில் அரசியல் மாற்றங்கள் மிகக் குறுகிய காலங்களிலேயே நிகழுகின்றன என்ற புரிதலோடு தமிழ் சமூகத்தின் இன்றைய தலைவர்கள் தங்கள் தலைமைக் காலகட்டத்தில் தம்மால் முடிந்த அளவுக்கு இந்த தமிழ் சமூகம் அனுபவிப்பதற்கு வகையாக ஒரு முற்போக்கான முன்னேற்றங்களை அடையும் நிலையை நிகழ்த்திக்காட்ட வேண்டும். இதற்காகவே இந்தக் கட்சிகளும், கூட்டங்களும், தேர்தல்களும், பதவிகளும், அரசியற் சந்திப்புகளும் எனக் கொள்ள வேண்டும்.

இத் தொடர் இங்கே முற்றுப் பெறுகிறது
சுபம்
நன்றி
வணக்கம்

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியாது–சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Monday, July 18, 2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் விசாரணை நடத்தப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Monday, July 18, 2011
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் சிலாபத்தைச் சேர்ந்த ஒருவரை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் கொக்கட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தனீஸ் செபஸ்தியன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunday, July 17, 2011

வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கே வெற்றி வாய்ப்பு: அபிவிருத்தி பணிகளால் மக்கள் ஓரணியில் திரள்வு!

Sunday, July 17, 2011
வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோகமான வெற்றிவாய்ப்பு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முப்பது வருடங்களாக எவ்விதமான அபிவிருத்தியையும் கண்டிராத அப்பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக இறுதியுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் தற்போது என்றுமில்லாதவாறு அபிவிருத்தி கண்டு வருகிறது. இதன் காரணமாக வடக்கில் இடம்பெறும் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆளும்கட்சி அமோக வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களை சகலவிதமான அடிப்படை வசதிகளுடனும் மீளக்குடியமர்த்திவரும் அரசாங்கம், வடக்கில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், மீன்பிடி உட்பட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து வருகிறது.

தேர்தலை முன்னிட்டே அரசாங்கம் இவ்வாறு செய்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய சிறுகட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்ற நிலையிலும் மக்கள் அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசாங்க அமைச்சர்கள் பலரும் நேரடியாகத் தமது பகுதிகளுக்கு விஜயம்செய்து தமது தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளை உடனடியாகவே வழங்கிவருவது இப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

புலிகள், ஆயுதப் போராட்டம் என்று முப்பது வருடங்களாகத் தமது வாழ்க்கையைத் தொலைத்துநிற்கும் வடபுல மக்களுக்கு அரசாங்கம் இன்று மேற்கொண்டுவரும் அபிவிருத்தியானது யுத்தத்தில் இழந்துபோன அனைத்தையும் மீள வழங்குவதாகவே அமைந்துள்ளது.

இதன் காரணமாக வடபுல தமிழ் மக்கள் அரசாங்கத்தின் ஆளுங்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். இது வடக்கில் போட்டியிடும் இன்றுமொரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக உள்ளது.

இதனால்தான் தமிழ்க் கூட்டமைப்பினர் மக்களிடையே அனுதாப அலையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்துவதாகவும், பிரசாரத்தில் ஈடுபடும் தமது வேட்பாளர்களை இனம் தெரியாதோர் தாக்குவதாகவும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் இவர்களது பொய்ப்பிரசாரத்திற்கு சோரம் போவதாக இல்லை. எனவேதான் ஆளுங்கட்சிக்கு வலுவான மக்கள் ஆதரவு இருந்துவருவதாக அவதானிகள் தெரிவித்தனர்.

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!

Sunday, July 17, 2011
அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!

வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்கிறார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளை புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெற விருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

Followers

Blog Archive