Tuesday, July 26, 2011

குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!
Tuesday, July 26, 2011
கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன. அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன யுத்தப்பிரபுக்களால் இனவெறியும் கொலைவெறியும் ஊட்டப்பட்ட இராணுவ வீரர்கள் யுத்தகளத்தில் பைத்தியக்காரர்களாக அல்லாமல் வேறென்னவாக இருந்திருப்பார்கள்.
ஒரு புறம் சிங்கள வெறி ஏற்றப்பட்ட படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.

கரணம் தப்பினால் மரணம் என தனது எதிரிப்படைகள் பற்றிய பயத்தோடு முன்னேறுகிற எந்த இராணுவமாக இருந்தாலும் அல்லது எதிரிப்படைகளிடமிருந்து தான் தப்பினாற் போதுமென தற்காப்புக்காக திணறிக் கொண்டிருக்கிற எந்த இராணுவமாக இருந்தாலும் அவை மக்களைப் பற்றியோ சர்வதேச யுத்ததர்மங்கள் பற்றியோ கவலைப்படப் போவதில்லை.
1989ம் ஆண்டு 60000க்கு மேற்பட்ட ஜேவிபி இளைஞர்களையும் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் என்று சந்தேகப் பட்டோரையும் மூன்றே மாதத்தில் கொன்றொழித்ததுவும் இதே சிறிலங்கா இராணுவமும் பொலிஸ_ம்தான். அப்போது இந்த புலிப்பிரமுகர்கள் யாரும் மனித மீறல் யுத்தக்குற்றம் போன்ற எதனையும் எழுப்பவில்லையே. மாறாக அப்போது அரசுக்குத் தலைமை வகித்த ஜனாதிபதி பிரேமதாசாவுடன் புலிகள் தேன்நிலவல்லவா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எத்தனை நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தென்னிலங்கை நகரங்களில் ரயர்களில் கொழுவி விடப்பட்டு கொழுத்தப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் தொகை தொகையாகச் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். ஜேவிபியின் தலைவர் ரோஹண விஜேவீராவும் உயிரோடு பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு பின்னர் கனத்தை மயானத்தில் உயிரோடு தகனம் செய்யப்பட்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதாலா, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சர்வதேச அரங்கில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை, அதைப்பற்றி தமிழர்கள் எந்தவித கவலையோ அக்கறையோ கொள்ளவில்லை. அவையும் மானிட இனத்துக்கு எதிரான குற்றங்கள்தானே! தனக்கு வந்தால்த்தானா தலையிடியும் காய்ச்சலும் வலிக்கும்!
நாங்கள் உலகத்துக்குப் பொதுவான நீதிநியாயங்களை எமது வசதி கருதி புறக்கணித்து இருந்தால் எமது சமூகத்துக்கான நீதிநியாயங்களும் உலகத்தாரால் அவரவரது வசதிக்கேற்றபடி புறக்கணிக்கப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பதன் அர்த்தம் என்ன! நல்லார் ஒருவரும் இலரேல் அந்த சமூகத்தவருக்கு மழையே கிடைக்காது என்பதுதானே!

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்பதன் அர்த்தமென்ன! வெறும் புல்லுகள் மட்டுமே இருக்குமாயின் அந்த புல்லுகலுள்ள பாத்திகளுக்கு எந்த வாய்க்காலாலும் நீர் வழிந்தோடி புசிய எவரும் விட மாட்டார் என்பதுதாளே! எனவே எல்லார்க்கும் பொதுவான நீதி நியாயங்களின் நியதிகளைப் புறக்கணித்து சுயவசதிக்கேற்றவாறு வக்காலத்து வாங்கும் புத்திஜுவிகளைக் கொண்ட சமூகத்துகக்கு அதற்கு அவசியமானபோது நீதிநியாயம் கிடைக்க யாரும் துணை நிற்க மாட்டார்கள் என்பதையே இந்தப் பொன்மொழிகளில் இருந்து புதரிந்து கொள்ள வேண்டும்.

1986ம் ஆண்டு மேமாதம் சிறீ சபாரத்தினம் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்களே! பல இளைஞர்கள் சந்தி சந்தியாக வைத்து மக்கள் முன்னிலையில் உயிரோடு எரிக்கப்பட்டார்களே! அப்படிக் கொலை செய்தவர்கள், அதற்குத்துணையாக நின்றவர்கள் எனப் பலர் இப்போது மேலைத் தேய நாடுகளில் வசதியாக வாழுகிறார்களே! அவர்களைத் தேடிப் பிடித்து சர்வதேசக் குற்றவாளிக்; கூண்டிலே நிறுத்த வேண்டும் என யாரும் குரலெழுப்பவில்லை. அப்போது கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் ரெலோ உறுப்பினர்கள் என்பதாலா அவர்களது உயிர்களுக்கு மதிப்பில்லை? ஆல்லது அந்தக் கொடூரங்களைச் செய்தவர்கள் தமிழ்ப் புலிகள் என்பதால் அந்தக் கொலைகள் சர்வதேசத்துக்கு நீதியான கொலைகளாகி விட்டனவா?
1986ம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கிலும் கிழக்கிலும்; பல நூற்றுக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்களைக் தைது செய்த புலிகள் அவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் சதோதரங்களின் முன்னால் வைத்து வெட்டிக் கொலைகள் செய்தார்கள், கட்டி வைத்து சுட்டுக் கொலைகள் செய்தார்கள்! மரங்களில் தலை சிதற அடித்துக் கொலைகள் செய்தார்கள், வாகனங்களில் கட்டி றோட்டு றோட்டாக இழுத்துச் சென்று அந்தத் தோழர்களின் சதைகள் நசிந்து கிழி;ந்து பிஞ்சு துண்டு துண்டாக வீதிகளில் கொட்டக் கொட்டக் கொலைகள் செய்தார்களே! அதெல்லாம் என்ன மானுட இனத்துக்கு நன்மை செய்வதற்காக தமிழ் மாவீரர்கள் நடாத்திய சர்வதேச சாகசங்களா!

1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கந்தன் கருணை இல்லத்தில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த ஏனைய இயக்கங்களின் அறுபத்து மூன்று உறுப்பினர்களை அடைத்த கூண்டுக்குள்ளேயே வைத்து புலிகளின் தலைவர்கள் சில வினாடிக்குள் சுட்டுப் பொசுக்கி பெற்றோரும் காணா வகையில் எங்கேயோ புதைத்தார்களோ! அந்தப் புதைகுழிகளை இன்று யார் தேடிக் காட்டுவார்! அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானுட இன விரோத குற்றம்தானே!

1990ல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் புலிகளால்; பிடிக்கப்பட்டு மிகக் கொடூரமாக சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களே அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானிட இனத்துக்கு எதிரான குற்றங்களே! அந்தக் குற்றங்கள் திறந்ததொரு நீதி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு உரிய நீதிமன்றங்களின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும் என்று இன்று வரையிலும் எந்தவொரு மனித உரிமைக்காரர்களாலும் எழுப்பப்படவில்லையே! ஏன் அந்தத் தமிழர்கள் வடக்;கு கிழக்கு மாகாண சபைக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் ஆதரவாக இருந்தார்கள் என்பதனால் அவர்கள் கொல்லப்பட வேண்டிய மானுட விரோதிகளா?

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் திகதி தோழர் பத்மநாபாவும் அவரோடு அங்கிருந்த தோழர் கிருபாகரன், தோழர் யோகசங்கரி, தோழர் கமலன் என பதின்மூன்று பேரை அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் சென்னை நகரத்தில் வைத்து ஒரு சில நிமிட நேரங்களுக்குள் படுகொலை செய்தார்களே! அந்தக் கொலைகள் என்ன யுத்தகள சண்டையிலேயா நடைபெற்றன. ஆயுதமற்று இன்னொரு நாட்டில் இருக்கையில்த்தானே கொலை செய்யப்பட்டார்கள். அந்தக் கொலைகளின் நேரடிக் காட்சிகள் படம் பிடிக்கப்படவில்லை என்பதாலா அவை சர்வதேச குற்றங்களாகவில்லை!
மேலே கூறப்பட்டுள்ள குற்றங்களை நிகழ்த்திய சர்வதேசக் குற்றவாளிகள் பலர் இன்னமும் மேலைத்தேய நாடுகளில் அகதி அந்தஸ்த்து பெற்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே! அவர்களை சர்வதேச பொலிஸ் அமைப்பானது பட்டியலிட்டு எந்தநாட்டில் இருந்தாலும் கைது செய்து சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று இதுவரை எந்த மனித உரிமைக்காரரும் கேட்கவில்லையா! ஏன்?

1990ம் ஆண்டு ஒரேநாளில் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போரின் எந்தவொரு பக்கத்தாரும் ஒரு மக்கள் சமூகத்தை அந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக அவர்களது வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றுவது சர்வதேச சட்டப்படி மானுட இனத்துக்கு விரோதமான சர்வதேசக் குற்றமே!. இங்கு முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுமல்ல அவர்களது அசையும் அசையாச் சொத்துக்களெல்லாம் புலிகளால் சூறையாடப்பட்டன. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா இந்த மாபெரும் மானுடக் கொடூரம் பற்றி மனித உரிமைக்காரர்கள் அவற்றைத் தெரிந்தும் தெரியாதது போல இருந்து விட்டார்கள்!

நீதி என்பதை தமிழனுக்கு ஒன்றாகவும் சிங்களவனுக்கு ஒன்றாகவும் கொள்வது மானுட நாகரீகமாகாது. சிறி லங்கா அரசையும் சிங்கள இனவாதிகளையும் குற்றம் சாட்டும் நாம் தமிழர்கள் மத்தியில் இருந்த சக்திகள் என்ன செய்தன என்பதிலும் நீதியான நியாயங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நீதி என்பது பிரபஞ்சமயமானது. அது எங்கும் எப்போதும் ஒரு தளத்தையே கொண்டதாகும். அது இன மத தேச எல்லைகளைக் கடந்த ஒன்றாகும். மனித சமூகத்தின் நீதியானது மானுட நாகரீக வளர்ச்சியின் உயர்ந்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; சிறி லங்கா அரச படைகள் .சிங்கள இனத்தின் நலனுக்காக நடந்து கொண்டது போலவே புலிகள் தமிழர்களின் நலன்களுக்காக நடந்து கொண்டார்கள் என்ற நியாயத்தை எந்தத் தமிழராவது கொண்டிருப்பாராயின் அந்த வகையானோர் சிறி லங்கா அரச படைகள் மீது குற்றம் சாட்டும்
எல்லாத் தகைமையையும் இழந்து விடுவார்கள்.

வரலாற்றில் நடந்தவை தொடர்பாக “ஆல்” போட்டு அசை போடுவது சரியான ஒரு வரலாற்று ஆய்வு முறைக்கு உரியதல்ல என்பது வரலாற்று ஆசிரியர்களிடம் உள்ள பொதுவான கருத்து. இருப்பினும் இங்கு ஒரு புரிந்துணர்வின் தேவைக்காக கடந்து போய்விட்ட யுத்தம் தொடர்பாக மறுபக்கமாக ஒரு விடயத்தை :”ஆல்” போட்டுக் கற்பனை செய்து நீங்களே என்ன நடந்திருக்கும் என்றும் அது தொடர்பாகப் பார்க்கையில் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் எவ்வளவு தூரம் மானுட நீதி நியாயங்களுக்கு உட்பட்டவர்கள் எனபதையும் சிந்தித்துப் பாருங்கள்.

அதாவது, நடந்த யுத்தத்தின் முடிவில் புலிகளின் இராணுவம் அரச படைகளை விரட்டியடித்து வடக்கு கிழக்கு மாகாணங்களின்; எல்லையோரமாக உள்ள அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
• அப்படிப்பட்ட ஒரு சூழலில் புலிகளின் பிடிக்குள் அகப்பட்டிருக்கக் கூடிய ஒரு அரச படை வீரனாவது உயிரோடு விடப்பட்டிருப்பானா! இன்றைக்கு பார்க்கையில் சிறி லங்கா பரடையினரிடம் சரணடைந்த பதினோராயிரம் புலிப் போராளிகள் மீண்டும் சாதாரண சமூக மனிதர்களாக வாழ்வதற்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் நம்பிக்கைகள் அளிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறி லங்கா அரச படைகள் புலிகளைத் தொட்டால் 40000 இராணுவத்தினர் பிணமாக தென்னிலங்கைக்கு சவப்பெட்டிகளில் அனுப்பப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தவர்கள்தானே புலிகள்.
அவ்வாறு புலிகளால் கைப்பற்றப்படும் பிரதேசத்தில் எந்தச் சிங்களவரையாவது அல்லது முஸ்லிம் மகனையாவது இருக்கவிட்டிருப்பார்களா! அல்லது அந்தப் பகுதிகளில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் நேசமாக இருந்திருக்கக் கூடிய தமிழர் எவரையாவது கூட விட்டு வைத்திருப்பார்களா! எத்தனை பேரை உயிரோடு விட்டிருப்பார்கள்! அந்தச் சிங்களவர்களின் மற்றும் முஸ்லிம்களின் எந்தவொரு சிறு உடைமையையாவது எடுத்துச் செல்ல விட்டிருப்பார்களா!

அப்படிச் சிந்தித்துப் பார்த்தீர்களானால் ஒரு சட்டபூர்வமான அரச படைக்கும் ஒரு பாசிச வெறி பிடித்த பயங்கரவாதக் குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும் அந்த அடிப்படையிலேயே எமது எதிர்காலம் குறித்து எமக்கு முன்னால் உள்ள உண்மையான அவசியமான சமூகக் கடமைகள் என்னென்ன உள்ளன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

புலிகளின் ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு நடுங்கிப் போயிருந்த ஒரு பாதிரியாரை ஒரு வருடத்துக்கு முன்னர் நான் சந்தித்தேன். அவர் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆரம்ப காலங்களில் கட்சி பேதம் குழு பேதங்களுக்கு அப்பால் நின்று ஒரு உற்சாகம் தரும் மனிதராக – ஆசானாக இருந்தவர் அவரை நான் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது சொன்னேன் :”தந்தையே! நாம் ஒவ்வொருவரும் இனி கடந்த காலம் பற்றிய எல்லாவற்றையும் மறந்து விட்டு மன்னித்து விட்டு எதிர்காலத்துக்கானவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றேன். உடனே அவர் “வரதர்! நாங்கள் இவங்களை (புலிகளை) மன்னிக்க வேண்டும். ஆனால் இவங்கள் செய்ததுகளை மறக்க ஏலாது” என்று கண்ணில் நீர் ததும்ப கூறினார். அவரது நெஞ்சு எவ்வளவு கனத்துப் போயிருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது.

இப்போது நான் கூறுவது என்னவென்றால், கடந்த யுத்தத்தில் நடந்து முடிந்த குற்றங்களை – அவை எவரால் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை – எம்மால் மறக்க முடியாவிட்டாலும் குற்றம் புரிந்தவர்கள் அனைவரையும் மன்னித்துவிட்டு முன்னேற்றகரமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கைகளோடு நடைபோட வேண்டும் – நடை போடமுடியும். குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது. மாறாக அவற்றை மன்னிப்பதன் மூலம் அந்தக் குற்றங்களை இழைத்தவர்களின் மனச்சாட்சிகளை நாம் எழுச்சி கொள்ள வைத்து அழிவுகாரர்களை மக்கள் சமூகங்களுக்கான ஆக்கபூர்வமானவர்களாக ஆக்க வேண்டும்.

புலிகள் செய்த யுத்தக் குற்றங்களையும் மானுட இனத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்களையும் எப்படி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் மன்னித்தார்களோ! எப்படி அவற்றை ரெலோ உறுப்பினர்கள் புளொட் உறுப்பினர்கள் ஈ என் டி எல் எவ் உறுப்பினர்கள், ஈ பி டி பி உறுப்பினர்கள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்கள் மறந்தார்களோ மன்னித்தார்களோ! எப்படி முஸ்லிம் மக்கள் மன்னித்து விட்டார்களோ! அவை போலவே இன்று அனைத்துத் தமிழ் மக்களும் கடந்து போன யுத்தத்தில் நடந்தவற்றைத் தோண்டி கிண்டி கிளறி பரிசோதனைகள் செய்யும் எண்ணங்களை நிறுத்திவிட்டு அந்தக் குற்றங்கள் இழைத்தவர்களை மனத்துணிவோடு மன்னித்துவிடவேண்டும்.
இன்iறைக்கு தமிழர் சமூகத்துக்கு – ஏன் இலங்கை மக்கசள் அனைவருக்கும் தேவைப்படுவது –
• ஜனநாயக அரசியற் பண்பாடு;,
• சுயகௌரவமான வாழ்வு,
• சுதந்திரங்கள் நிறைந்த சூழல்,
• சமத்துவமான சமூக நீதிகள்,
• சகோதரத்துவமான இனமத உறவுகள்;,
• செழிப்பான சமூக பொருளாதார முன்னேற்றம்
இந்த ஆக்கபூர்வமான இலக்குகளை ஏந்தியபடி ஈழத்தமிழ் மக்கள் முன்னோக்கி நடைபோட வேண்டும். என்பதை எமது விருப்பமாகக் கொள்ள வேண்டும்.
அதை நோக்கி நாம் எல்லோரும் நம்பிக்கையோடு செயற்பட வேண்டும்.

இப்படிக்கு
உங்கள் அன்புத் தோழன்
அ.வரதராஜப்பெருமாள்

Monday, July 18, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி-4.

Monday, July 18, 2011
ததேகூக்காரர்கள் உண்மையில் இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியற் சூழ்நிலைகளை ஆண்டுநிற்கும் உள்நாட்டு வெளிநாட்டுக் காரணிகள் அனைத்தையும் தமது கணக்கில் சரியாக எடுத்துக் கொண்டு அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியற் தீர்வினை எப்படியாயினும் நடைமுறைக்குக் கொண்டு வ்நதுவிட வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைக் களத்தில் செயற்பட வேண்டும். அதன்மூலம் -

காரிய ஆற்றல் கொண்ட ஒரு மாகாண ஆட்சியை வடக்கு கிழக்கில் செயற்பட வைக்க வேண்டும்
வடக்கு கிழக்கில் மாகாண ஆட்சியின் கீழான சிவில் நிர்வாகங்களை முறையாக ஆக்கி அவை திறம்பட மக்கள் சேவைகளை ஆற்றும் நிலையை ஏற்படுத்த வேண்டும்,
யுத்தத்தால் சிதைந்து போன எமது மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மீளக் கட்டியெழுப்பி மக்கள் பட்ட துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு அவர்கள் உடலாலும் மனதாலும் மீண்டும் வலிமை பெறும் நிலை ஏற்படுவதற்கான அடிப்படைகளை ஆக்க வேண்டும்,

யுத்தத்தால் சீரழிக்கப்பட்டுப் போய்க்கிடக்கும் எமது வடக்கு கிழக்கு தேசத்தின் பொருளாதாரம், சமூகசேவை மற்றும் நிர்வாக உட்கட்டுமானங்களை எல்லாம் அதிவிரைவாகக் கட்டியெழுப்பும் ஆட்சி யொன்று மாகாண மட்டத்தில் செயற்பட வகை செய்ய வேண்டும்,
எமது வடக்கு கிழக்கு தேசத்தில் மீண்டும் விவசாயமும் மீன்பிடியும் கால்நடை வளர்ப்புகளும் செழிப்புற வைக்கும் மாகாண ஆட்சி ஒன்று செயற்பட வேண்டும்,
எமது தேசத்தில் புதிய காலத்துடன் தொடர்பான தொழில் வளர்ச்சிகள் மற்றும் சேவைத்துறை வளர்ச்சிகளை எழுச்சி பெற வகை செய்யும் மாகாணத் தலைமையொன்று அரசியல் அதிகாரத்தடன் செயற்பட வேண்டும்
எமது தேசத்தில் சட்டம், ஒழுங்கு, நீதி, மானுட உரிமைகள், தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை நிலை நாட்டுவதில் காத்திரமான பங்கைச் செலுத்துகின்ற மாகாண மக்களாட்சியை நிலைநாட்ட வேண்டும்;.

இந்த இலக்குகளை அடையும் வகையான ஏற்பாடுகளே இன்றைய இலங்கைத் தமிழ் மக்களின்
அபிலாஷைகளிற் பிரதானமானவைகளாகும்- இவற்றை சமாதானமான முறையில் அடைவதற்காகவே அரசுடனான சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் பயன்பட வேண்டும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது சில கட்சிகளுக்கு மட்டுமே உரிய அரசியல் வேலைத்திட்டமல்ல. மாறாக அந்தத்தீர்வை வேண்டி நிற்கும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சமூக அரசியல் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அந்த இயக்கத்தை முன்னெடுக்கும் கடமையையும் தலைமைப் பொறுப்பையும் தற்போது தமிழ் மக்கள் ஜனநாயக பூர்வமாகவும் சட்ட ப+ர்வமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடமே பிரதானமாக ஒப்படைத்திருக்கிறார்கள்.

மக்களின் பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பொது அபிலாஷைகள் தொடர்பாக எப்போதும் அக்கறையோடிருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொதுமக்களிற் சிலரோ அல்லது தமது ஆதரவாளர்களிற் சிலரோ தமது நியாயமான முயற்சிகளுக்கோ, சரியான அரசியல் முன்னெடுப்புகளுக்கோ தடைக்கட்டை போடுபவர்களாக செயற்படுவதை அனுமதிப்பது ஒரு பொறுப்பான அரசியல் சமூகத் தலைமைக்கு அழகுமல்ல சரியுமல்ல.

தலைவர்கள் தமது முன்னெடுப்புகளும் முயற்சிகளும் நியாயமானவை முறையானவை மக்களின் பொது நலன்களுக்கு அவசியமானவை என்று தாம் கண்டு துணிந்தால், அதன்பின்னர் அவை தொடர்பாக பொது மக்கள் மத்தியிலோ தமது ஆதரவாளர்கள் மத்தியிலோ குழப்பம் ஏதும் நிலவும் இடத்து அவர்களுக்கு தமது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள் பற்றியும் தமது முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் பகிரங்கமாகத் துணிந்து தெளிவுபடுத்தி தமது ஆதரவாளர்களையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் தம்மோடு துணையாக அணைத்துச் செல்லல் வேண்டும் - வழி நடத்திச் செல்லல் வேண்டும்.

ததேகூவினர் அரசுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் முறைகள் மற்றும் வகைகளை அவதானிக்கின்ற போதும், அவை தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாக விடுக்கும் அறிக்கைகளை நோக்குகின்ற பொழுதும் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய அரசியல் பொருளாதார சமூக காலவர்த்தமான நியதிகள் நியாயங்களைக் கணக்கிலெடுத்து அவசியமானதும் அவசரமானதுமான அரசியற் தீர்வைக் காண்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

மாறாக,

தங்களுக்குள் ஒருவரையொருவர் வெட்டியோடும் போக்கைக் கொண்டிருப்பது தெரிகிறது.
வெளிநாடுகளில் இருக்கும் தமிழீழத் தீவிரவாதிகளையும் உள்நாட்டில் இருக்கும் அரச எதிர்ப்புவாதிகளையும் திருப்திப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவதே தெரிகிறது.
அரசியற் தீர்வொன்றை எட்டுவதில் காட்டப்படும் அக்கறையை விட அதிகமாக இந்த பேச்சுவாத்தைக் களம் மூலம் வெவ்வேறு வகையான தனிப்பட்ட அரசியல் பொருளாதார லாபங்களில் அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறப்படுவதை, அப்படியல்ல என்று மறுப்பதற்கான நியாயங்களை ததேகூகாரர்கள் தருவதாக இல்லை.

தமிழர்கள் பூரண திருப்தியோடு இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக முன்வந்து மனமுவந்து அங்கீகரிப்பதற்குத் தயாராக இல்லை என்று கண்டு பிடிப்பதற்கு பெரிய கற்றறிவும் நீண்ட பட்டறிவும் அவசியமில்லை.

அதை மீண்டும் மீண்டும் குழறிக் குழறிச் சொல்வதற்கு ஒரு கெட்டித்தனமும் தேவையில்லை. மக்கள் தமது பொன்னான வாக்குகளை நேரம் மினக்கெட்டு போட்டு தலைவர்களை தெரிவு செய்தது இந்தப் புழுத்துப்போன புண்ணாக்கு அறிக்கைகளை விடுவதற்காகவா?

தமிழர்கள் பூரண திருப்தியோடு ஏற்கக் கூடியதோர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக மனமுவந்து முன்வந்து தரத் தயாராக இருப்பார்களேயானால் இந்தப் பேச்சுவாத்தை சுற்றுக்கள் எவையும் அவசியமற்றவை அல்லவா!

மஹிந்த சிந்தனையாளர்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்குமிடையில் பெரியதோர் இடைவெளி இருப்பதால்தானே அவை தொடர்பான அரசியற் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன! அதனாற்தானே இந்திய அரசு இலங்கை அதிபருக்கு அரசியல் தீர்வு பற்றி சொல்ல வேண்டியேற்படுகிறது. இந்தச் சூழலின் விளைவாகத்தானே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அரசியற் தீர்வ தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை அவசியமாக்கியுள்ளது.

அரசியற் தீர்வுக்காக பேச்சுவார்த்தை என்னும் நடைமுறையைக் கடைப்பிடிப்பது அரசியல் விஞ்ஞானத்தில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பிரதானமான பாகம். சர்வதேச அனுபவங்களினூடாக இந்த நடைமுறையை பிரயோகிப்பது தொடர்பில் பல கோட்பாடுகளும் தேற்றங்களும் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை என்பது பல நடைமுறை நுட்பங்கள் நிறைந்த ஒரு கலை.

கருத்துக்கள் – நிலைப்பாடுகளின் வேறுபாடுகளைக் கொண்டவர்களிடையே நடைமுறைச் சாத்தியமான பொதுக் கருத்துக்களை – பொது நிலைப்பாடுகளைச் சித்தி பெறச் செய்வதற்கான சமரசங்களை நிலைநாட்டும் சமாதானமான முறையே பேச்சுவார்த்தை.

பேச்சுவார்த்தை என்னும் வழிமுறையைக் கடைப்பிடிப்பதில் ரகசியங்களும் பரகசியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன.

ஒரு பேச்சுவார்த்தையில் எந்தளவுக்கு ரகசியங்கள் பேணப்பட வேண்டும்.
எந்தெந்த விடயங்களில் எந்தெந்த அளவுக்கு மேல் ரகசியம் கட்டாயமாக்கப்படக் கூடாது,
எந்த அளவுக்கு பரகசியம் தவிர்க்க முடியாதது என்பன
என்ன விடயங்கள் பேசப்படுகின்றன,
யார் தொடர்பாகப் பேசப்படுகின்றன.
யார்யாருக்கிடையில் பேசப்படுகின்றன.
என்பவற்றோடெல்லாம் சம்பந்தப்பட்டவையாகும்.

தனிப்பட்ட வியாபாரிகள் தங்களுக்கிடையில் பேரம் பேசுவதில் ரகசியங்கள் பேணப்படலாம். அது அவசியமாகவும் இருக்கலாம். அது தனிப்பட்ட இரு பகுதியினரின் லாப நட்டங்களோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும். ஆனால் பொது மக்களின் பொது விவகாரங்களில் வேறுபாடுகளினிடையே ஒற்றுமைகளைச் சாதிப்பதற்கென நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்; போது ரகசியம் என்பது அதற்கு மிகவும் அவசியமான குறைந்த பட்ச எல்லைக்கு மேல் பேணப்பட்டால் அந்த ரகசியம் பேணலானது பேச்சுவார்த்தை மூலம் அடையப்படவென முயற்சிக்கும் இலக்குகளுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்;.

அரச பிரதிநிதிகளும் ததேகூவினரும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எட்டுத் தடவைகள் சந்தித்த போதும் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்ற கேள்விகளுக்கு அவை ரகசியங்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் சந்திப்புக்கள் முடிந்த ஒவ்வொரு கட்டத்திலும் இரு பகுதியினரும் வெளியிட்ட கருத்துக்களை உற்று நோக்கி ஆய்பவர்களுக்கு இங்கு நடந்து முடிந்த சுற்று சந்திப்புகளில் எதுவும் பேசப்படவில்லை என்பது பரகசியமாக உள்ளது.

அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட அத்தனை தமிழ் இளைஞர்களினதும் பெயர்பட்டியலை அரசிடமிருந்து எடுக்காமல் விடமாட்டோம் என பகிரங்க சவால் விட்டார்கள். ஆனால் எட்டுத் தரம் சுற்றியும் ஒரு துண்டு பட்டியலையும் பெற்றதாக இல்லை.

ஆறு சுற்று சந்திப்புக்களுக்குப் பின்னர் ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை ததேகூவினர் அரசிடம் முன்வைத்திருப்பதாக ஊடகங்களில் கசிந்தன. அதில் எத்தனை அரசால் ஏற்கப்பட்டது எத்தனை அரசால் முற்றாக நிராகரிக்கப்பட்டது, எத்தனை விடயங்களில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காண வாய்ப்புக்கள் உள்ளன என அடையாளம் காணப்பட்டது என்றால் எதுவுமே நடக்கவில்லை.

ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை பேப்பரில் அச்சடித்து ரகசியமாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு கடித உறையும் ஜனாதிபதி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வர ஒரு ஆளும் போதுமே. இதற்காகவா ஐந்து தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஆறு தடவைகள் சுற்றிச் சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்!

பின்னர் பன்னிரண்டு அம்சத் திட்டம் ஒன்றை அரசாங்கம் எட்டாவது சுற்றில் முன்வைக்கவுள்ளது என்றார் ததேகூவின் சட்டப் பேச்சாளர்.

எட்டாவது சுற்றில் எதுவுமே தரவில்லை என்று சொல்லிக் கொண்டு கைவீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு என வீடு நோக்கி விட்டார்கள்.

2010 நவம்பரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டதால் 2011 ஜூன் வரை அரசாங்க பிரதிநிதிகளும் ததேகூ பிரதிநிதிகளும் எட்டுத் தடவைகள் சந்தித்தார்கள்.

2011 ஜூனில் இந்திய உயர் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் நிருபமாராவ் ஆகியோர் இலங்கை விஜயம் செய்து ஜனாதிபதியைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி அரசியற் தீர்வைக் காணும் கடமையை பாராளுமன்ற தெரிவுக் கமிட்டியொன்றிடம் விட்டுவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதன் மூலம் ததேகூவுடன் அரசியற் தீர்வுக்காக நடக்கும் சந்திப்புக்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான முத்தாய்பபை வெளியிட்டுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.

ஆக மொத்தத்தில் புலியில்லா யுகத்தில் அரசு மற்றும் தமிழர் பிரதிநிதிகளுக்கு இடையே முதலாவது கட்டமாக எட்டுச் சுற்றுக்களாக நடந்த சந்திப்புக்கள் அரசியற் பேச்சுவார்த்தையென எதுவும் இல்லாமலே இந்தப் படக் காட்சி முற்றும் என முடிந்து விட்டதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர் சுற்று இனி எப்போது என்பது மிக விரைவில் பலராலும் எதிர்பார்க்கப்படவுள்ளது.

அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கம் இடையே சந்திப்புக்கள் தொடர்ந்து இருப்பது அவசியமாகும்.

சந்திப்புக்களின் போது உடன்பாடான விடயங்கள் எவையெவை என்பதுவும், நிலைப்பாடுகள் ரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் எவையெவை என்பதுவும், முரண்பாடாக உள்ள விடயங்கள் எவையெவை என்பதுவும
திட்டவட்டமாக அடையாளம் காணப்பட வேண்டும்.

ஒரு பேச்சுவார்த்தை செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அப்பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்திலேயே வேறுபாடான விடயங்களையோ அல்லது முரண்பாடான விடயங்களையோ அந்தப் பேச்சுவார்த்தை தொடரின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை கொண்டவையாக ஆக்கக் கூடாது,

எனவே முதலில், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இருபகுதியினரும் என்னென்ன விடயங்களிலெல்லாம் உடன்பாடாக உள்ளனரோ அந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை முறையாக நிரல்படுத்தி ஓர் உடன்பாட்டு வரைவாக ஆக்க வேண்டும்.

அடுத்து, நிலைப்பாட்டுரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் தொடர்பாக முதலில் அரச பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று சமரசங்கள் காணப்படல் வேண்டும். புரிந்துணர்வும் நம்பிக்கைகளும் விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் சமரசம் காண முடியாது.

அதன்பின்னர், இருபகுதியினரிடையேயும் முரண்பாடானதாக உள்ள – அதாவது மிகவும் சிக்கலானதும் இணக்கம் காண்பதற்கு சிரமமானதுமான - விடயங்களில் எந்த விடயங்கள் உடனடிக்கட்டாயமாக உடன்பாடு காணப்பட்டு நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு அவசியமானவை என்று அடையாளம் கண்டு அவை தொடர்பாக முடிந்தளவு இணக்கம் காண முயல வேண்டும்.

ஏனைய முரண்பாடான விடயங்களை பேச்சுவார்த்தைகளுக்காகக் காலம் தள்ளிப் பின்போட்டுவிட்டு உடன்பாடு கண்ட விடயங்களை முடிந்த அளவு விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வருவதே ஒரு பேச்சுவார்த்தையை காரியசித்தியுடையதாக ஆக்கும் அணுகுமுறையாகும்..

ஒரு சில முரண்பாடுகளுக்காக அதுவும் உடன்பாடான விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கு தடையாக இல்லாத விடயங்களுக்கு, அவை கொள்கைரீதியில் எவ்வளவுதான் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பினும், அவற்றுக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்து உடன்பாடான விடயங்கள் அத்தனையையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருப்பதென்பது பொறுப்பு வாய்ந்த சமூக அரசியற் தலைமைக்கு இழுக்காகும்.

அந்த முரண்பாடான விடயங்களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை அக்கறையற்றவைகளாக புறந்தள்ளிவிட வேண்டியதில்லை. மாறாக அவற்றை பின்னொரு கட்டத்தில் உருவாகும் பேச்சவார்த்தைக் களங்களில் பார்த்துக் கொள்ளலாம் என முனைவதே விவேகமாகும்.

சமூகங்கள் இயங்கும் வரை - சமூகங்கங்களுக்கிடையில் உறவுகள் இருக்கும் வரை அரசியலும் இயங்கும். ஒரு ஆட்சித் தலைவரோடு அவர் ஆளும் தேசமும் முடிவதில்லை – அதே ஆட்சி;த் தலைவர் கூட தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டோடு மாறாது இருப்பார் என்றும் இல்லை.

அதேபோல ஒரு தடவை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே எப்போதும் அந்த மக்கள் சமூகத்தின் தலைவர்களாக இருப்பார்கள் என்றும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாது என்பது இயற்கை. அதிலும் ஜனநாயகத்தில் அரசியல் மாற்றங்கள் மிகக் குறுகிய காலங்களிலேயே நிகழுகின்றன என்ற புரிதலோடு தமிழ் சமூகத்தின் இன்றைய தலைவர்கள் தங்கள் தலைமைக் காலகட்டத்தில் தம்மால் முடிந்த அளவுக்கு இந்த தமிழ் சமூகம் அனுபவிப்பதற்கு வகையாக ஒரு முற்போக்கான முன்னேற்றங்களை அடையும் நிலையை நிகழ்த்திக்காட்ட வேண்டும். இதற்காகவே இந்தக் கட்சிகளும், கூட்டங்களும், தேர்தல்களும், பதவிகளும், அரசியற் சந்திப்புகளும் எனக் கொள்ள வேண்டும்.

இத் தொடர் இங்கே முற்றுப் பெறுகிறது
சுபம்
நன்றி
வணக்கம்

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியாது–சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Monday, July 18, 2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் விசாரணை நடத்தப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Monday, July 18, 2011
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் சிலாபத்தைச் சேர்ந்த ஒருவரை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் கொக்கட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தனீஸ் செபஸ்தியன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunday, July 17, 2011

வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கே வெற்றி வாய்ப்பு: அபிவிருத்தி பணிகளால் மக்கள் ஓரணியில் திரள்வு!

Sunday, July 17, 2011
வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோகமான வெற்றிவாய்ப்பு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முப்பது வருடங்களாக எவ்விதமான அபிவிருத்தியையும் கண்டிராத அப்பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக இறுதியுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் தற்போது என்றுமில்லாதவாறு அபிவிருத்தி கண்டு வருகிறது. இதன் காரணமாக வடக்கில் இடம்பெறும் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆளும்கட்சி அமோக வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களை சகலவிதமான அடிப்படை வசதிகளுடனும் மீளக்குடியமர்த்திவரும் அரசாங்கம், வடக்கில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், மீன்பிடி உட்பட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து வருகிறது.

தேர்தலை முன்னிட்டே அரசாங்கம் இவ்வாறு செய்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய சிறுகட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்ற நிலையிலும் மக்கள் அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசாங்க அமைச்சர்கள் பலரும் நேரடியாகத் தமது பகுதிகளுக்கு விஜயம்செய்து தமது தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளை உடனடியாகவே வழங்கிவருவது இப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

புலிகள், ஆயுதப் போராட்டம் என்று முப்பது வருடங்களாகத் தமது வாழ்க்கையைத் தொலைத்துநிற்கும் வடபுல மக்களுக்கு அரசாங்கம் இன்று மேற்கொண்டுவரும் அபிவிருத்தியானது யுத்தத்தில் இழந்துபோன அனைத்தையும் மீள வழங்குவதாகவே அமைந்துள்ளது.

இதன் காரணமாக வடபுல தமிழ் மக்கள் அரசாங்கத்தின் ஆளுங்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். இது வடக்கில் போட்டியிடும் இன்றுமொரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக உள்ளது.

இதனால்தான் தமிழ்க் கூட்டமைப்பினர் மக்களிடையே அனுதாப அலையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்துவதாகவும், பிரசாரத்தில் ஈடுபடும் தமது வேட்பாளர்களை இனம் தெரியாதோர் தாக்குவதாகவும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் இவர்களது பொய்ப்பிரசாரத்திற்கு சோரம் போவதாக இல்லை. எனவேதான் ஆளுங்கட்சிக்கு வலுவான மக்கள் ஆதரவு இருந்துவருவதாக அவதானிகள் தெரிவித்தனர்.

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!

Sunday, July 17, 2011
அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!

வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்கிறார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளை புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெற விருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இராணுவம் இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!

Sunday, July 17, 2011
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இராணுவம் இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் இராணுவம் பாதுகாப்பு கடமைகளையே மேற்கொண்டு வருவதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். இராணுவத்தினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். மூன்று தசாப்தங்களாக போலியான பிரசாரங்களைச் செய்து அரசியல் நடத்திவந்த ஒரு சிலர் தற்போது இராணுவத்துக்கு எதிராக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறான அரசியல் தலைவர்களால் ஆக்கபூர்வமான திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலைமையை உணர்ந்துள்ள மக்கள் பெருமளவில் இன்று அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனைப் பொறுக்க முடியாத இவர்கள் இராணுவத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த ஆரம்பித்துள்ளனர். மக்களைத் திசை திருப்பும் நோக்கில் முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவற்றை முற்றாக மறுப்பதாகவும் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்.

யாழ். மக்களுக்கு 20 கோடி ரூபா கடன் வழங்கும் திட்டம்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, July 17, 2011
யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் கடன் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 19-ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இதன்போது சுமார் 20 கோடி ரூபா தொகையானது 1280 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடமைப்புக்காகவும், சுயதொழிலுக்காகவும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையான கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

நிர்மாணத்துறை அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் ஒத்துழைப்போடு மேற்படி கடன் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, July 11, 2011

உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை 12ம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது!

Monday, July 11, 2011
65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை 12ம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. இத்தேர்தலில் 60 ஆயிரத்து 643 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்கும் பணியில் நூறு தொண்டர்களை ஈடுபடுத்தவிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். தபால் மூல வாக்களிப்பை அமைதியாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பி.கே. காமினி நவரட்ண கூறினார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் நவரட்ன மேலும் கூறுகையில், ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகள் அடங்கலான 65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. இதற்கென தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள 28 பொலிஸ் பிரிவுகளிலுள்ள 108 பொலிஸ் நிலையப் பகுதிகளிலேயே இத்தேர்தல் நடைபெறுகின்றது.

சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது!

Monday, July 11, 2011
இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலரை நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும்

Sunday, July 10, 2011

சில புலம்பெயர் புலிகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார்–ஜனாதிபதி!

Sunday, July 10, 2011
சில புலம்பெயர் புலிகளின் ச சவால்களை எதிர்நோக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் புலிகளின் ஒரு சிலர், அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுத்து வருவதாகவும் அதனை எதிர்நோக்க தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாடு அபிவிருத்தி நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்து செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது சில தரப்பினர் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

சில புலம்பெயர் சமூகங்கள் நாடு தொடர்பான பிழையான விம்பமொன்றை வெளிக்காட்ட முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் மற்றும் நிம்மதியை மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நகரத்திற்கு மட்டும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் கிராமங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று சிங்கள அமைப்புகள் சனல் 4க்கெதிராக பிரித்தானியாவில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளன!

Sunday, July 10, 2011
இலங்கை மக்களை அவமானப்படுத்தியமை, இராணுவத்தினரை கொலைகார்களாக சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் சித்தரித்தமை, பயங்கரவாத அமைப்பான புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உதவியமை ஆகிய மூன்று பிரதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள மூன்று சிங்கள அமைப்புகள் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளன.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சேனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே மற்றும் வீடியோ காட்சிகளை வழங்கிய இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு என்பன குறிப்பிடப்பட உள்ளன.

வழக்கில் சாட்சியமளிப்பதற்காக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அழைக்கப்பட உள்ளதாக சிங்கள அமைப்புகளை சேர்ந்த அதிகரிகள் தெரிவிததுள்ளனர்.

அத்துடன் சேனல் 4 தொலைக்காட்சியிடம் 100 மில்லியன் பவுண்கள் இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் வீடியோ படம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதியில் எடுக்கப்பட்ட படம் எனக் கூறி, சேனல் 4 தொலைக்காட்சி உலக மக்களை தவறாக வழி நடத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கில் சாட்சியமளிப்பதற்காக மூன்று வீடியோ தொடர்பா நிபுணர்கள் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Thursday, July 7, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி 2.

Thursday, July 7, 2011
கடந்த ஆறுமாத காலத்தில் அரசுடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என சுற்றி சுற்றி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தமிழர்களின் உண்மையான அரசியல் பொருளாதார நியாயங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டவட்டமான ஒரு அரசியற் தீர்வுக் கோரிக்கை வரைவை இதுவரை காலகட்டத்துக்குள் ஆக்கியிருக்க வேண்டும்.அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அறிஞர்கள் அரசியல் யாப்பு சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் பரவலாக அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியற் தீர்வு விவகாரங்களுக்கான கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும்.

அவை தொடர்பாக திட்டவட்டமான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவுமில்லை. அப்படியான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதற்கான அறிகுறி கூட இல்லையே!

தமிழ் மக்கள் தமக்கே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பதால்

தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் தம்மோடு மட்டுமே அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு பற்றிப் பேச வேண்டும் என்றும் கோருகின்ற ததேகூகாரர்கள் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு எதனையும் பகிரங்கமாக சொல்கிறார்கள் இல்லை என்பது மட்டுமல்ல. ததேகூவிலுள்ள கட்சிகளின் முக்கிய தலைவர்களோடென்ன! தமது நெருங்கிய ஆதரவாளர்களோடோ கூட

தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தொடர்பாக எதுவும் பேசுவதாகவோ – கலந்துரையாடுவதாகவோ – ஆலோசனைகளை அபிப்பிராயங்களைப் பெறுவதாகவோ இல்லை என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதானால் பேச்சுவார்த்தை அரங்கத்தில் பங்குபற்றும் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தாங்கள்; என்ன விடயங்களை எப்போது முன்வைத்து பேசுவது என்பது பற்றியும்

ஓட்டுமொத்தத்தில் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அவசியமான அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் அத்துடன் ஓவ்வொரு விடயதானத்தின் போதும் எவ்வாறான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தை அரங்கத்தில் முன்னேற்றங்களை நிலைநாட்டுவது என்னென்ன விடயங்களி;ல் இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பது என்னென்ன விடயங்களில் எந்தெந்த அளவில் விட்டுக் கொடுத்து சமரசம் காண்பது.

போன்ற பல்வேறு தொடர்புபட்ட விடயங்கள் ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அவசியமாகும்.

இவ்வாறான பிரதானமான விடயங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இருப்பது அவசியமாகும் அப்படியான நிலைமை இங்கு இருப்பதாகத் தெரியவில்லை தங்களுக்குள் யார்யார் எந்தெந்த விடயங்களில் முன்தயாரிப்புகளை மேற்கொள்வது பேச்சுவார்த்தை அரங்கத்தில் யார் யார் எந்தெந்த விடயங்களை முன்வைத்து அவற்றுக்கான கொள்கை மற்றும் சட்ட வடிவங்களையும் அந்தப் பிரேரணைகள் அல்லது திருத்தங்களுக்கான நியாயங்களையும் பேசுவது எனும் வேலைப் பகுப்புத் திட்டத்துடன் ததேகூகாரர்கள் செயற்படுவதாச் சிறிதும் தெரியவில்லை.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் எதிரணியாக அமர்ந்திருந்தாலும் அரங்கத்தில் எவ்வாறு பொதுவான நம்பிக்கைகளை வலுப்படுத்துவது என்பதிலும் .. கனத்த எதிர்பார்க்கைகளோடு இருக்கும் மக்களுக்கு பேச்சுவார்த்தை அரங்கத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் தொடர்பான தெளிவை ஏற்படுத்துவதிலும்

தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் ததேகூவினர்

தமது கூட்டுப் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதாகக் காண முடியவில்லை. அத்துடன் தம்மை நம்பியிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதில் கூட்டாக இசைந்து செயற்படும் பண்புகளை அவர்கள் கொண்டிருப்பதாகவும் காணமுடியவில்லை.

அரசியல் தீர்வு காணும் விடயத்தை அரசுடன் பேசுவதற்கு தமக்கே தமிழ் மக்கள் ஏக பிரதிநிதித்துவ ஆணை தந்திருப்பதாக உரிமை கோரும் ததேகூகாரர்களிடம் அரசியற் தீர்வு அதற்கான பேச்சுவார்த்தைகள் என்பவற்றில் அவர்கள் கொண்டிருக்கும்; நிலைப்பாடுகள் மற்றும் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் ஆகியவற்பை; பார்க்கும் போது அவற்றில் ஓர் ஒருங்கிசைவான தொடர்ச்சியைக் காண முடியவில்லை.

கடந்த ஆறு மாதங்களில் ததேகூகாரர்கள் தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் மற்றும் போக்குகள் தொடர்பாகவும்

அத்துடன் ஒவ்வொரு சுற்றுச் சந்திப்புகளுக்கு முன்னும் பின்னும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பத்திரிகை அறிக்கைகள் சவால்கள் விரக்திகள் எனபனவற்றைத் தொகுப்பார்த்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியற் தீர்வ தொடர்பாக ததேகூ காரர்கள்

குழப்பமான கண்ணோட்டங்களுடனும் குழறுபடியான அணுகுமுறைகளுடனும் உறுதியற்ற நிலைப்பாடுகளுடனுமே உள்ளனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

ததேகூக்காரர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னர் ஒருவிதமாக அரசியல் இசைக்கிறார்கள் பின்னர் அத் தேர்தல்கள் முடிந்ததும் வேறொரு விதமாக அரசியல் இசைக்கிறார்கள்.

சந்திப்புச் சுற்றுக்களில் பங்கு பற்றும் ததேகூ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பியவாறு - தத்தமக்கு ஏற்றவாறு – ஒருவருக்கு ஒருவர் முரணாக வெவ்வேறு சுரங்களில் - சுருதிகளில் - தாளங்களில் தங்கள் அரசியற் பாடல்களை இசைக்கிறார்கள்.

ததேகூ வின் தானைத் தலைவர் சேனாதிராஜா அவர்களோ அரசு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தாவிட்டால் அரச படைகள் உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேறாவிட்டால்

அரசு ததேகூவினரின் அரசியல் ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பு தராவிட்டால் அரசுடன் பேச்சுவார்த்தை முறிவடையும்; என ஓங்காரம் எழுப்புகிறார் - போராட்டம் வெடிக்கும் எனப் பிரகடன முழக்கமிடுகிறார்.

ததேகூவின் தேசிய உறுப்பினர் சுமந்திரனோ அவ்வப்போது அரசாங்கம் பேச்சுவார்த்தையை நேரத்துக்கு நடத்தவில்லை என்று பூபாளம் இசைப்பதோடு ஒவ்வொரு சுற்று சந்திப்பு முடிவிலும் ஜனாதிபதி மாளிகையின் வாசலில் வைத்து பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கையளிக்கிறது என கொட்டு மேளம் கொட்ட மங்கள வாழ்த்தும் இசைக்கிறார்.

ததேகூவின் அரசியல் அசகாய சூரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களோ ஒவ்வொரு சுற்றுச் சந்திப்பும் முடிவடைந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியே வருகையில் குதூகலமான சிரிப்போடுதான் வருகிறார். ஆனாலும் அந்தச் சுற்றுகளில் என்னதான் நல்ல மழை பொழிந்ததோ இல்லையோ சுற்று முடிந்து இரண்டாம் மூன்றாம் நாட்;களிலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லை என முகாரி பாடுவதை விடாப்பிடியாகத் தொடர்கிறார்.

ததேகூவின் கிளிநொச்சி மாவீரன் சிறீதரன் அவர்கள் சுற்றுச் சந்திப்புக்கு பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் வெளியே நின்ற படியே ததேகூகாரர்களே மிரண்டு போகும் வகையாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையால் எந்தவித பயனுமில்லை எனவும்

எனவே தமிழர் தேசத்துக்கு சுயநிர்ணயமே ஒரே வழி எனவும் புலித் தமிழீழப் பாட்டை மாற்றிப் போட்டு பொங்கு தமிழ்காரர்களுக்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என யுத்தநாதம் கிளப்புகிறார்.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு தனது வயது முதிர்வின் காரணமாகவும் நோய்வாய் நிலை காரணமாகவும் தமிழக வீட்டில் அடிக்கடி ஓய்வெடுத்துத் திரும்பும் ததேகூவின் பெருந் தலைவர் சம்பந்தர் அவர்களோமதிப்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் இலங்கைப் பிரச்சினையில் ததேகூவுடன் தோள் கொடுத்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் குழுவினர் வெளிக்கொண்டு வந்திருக்கும் முள்ளிவாய்க்காலின் உண்மைகளை தாமும் அங்கீகரித்து ஆதரிப்பதாகவும் எனவே இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் கிருஸ்ணா சொல்லுகிறபடியும் கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் வலியுறுத்துகிறபடியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ததேகூ கேட்கிற வகையாக சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியற் தீர்வைத் தர வேண்டும் என ராகமாலிகாவில் தனக்கிணையாக தர்பாரில் ராஜதந்திர அரசியலை நடத்த எவருமுண்டோ என ஏற்ற இறக்க அகாரங்களோடு அசைத்தசைத்து பாட்டும் நானே பாவமும் நானே என அரியணையில் இருக்கும் மஹிந்தவை அசர வைத்து விடும் நினைப்பில் தனது கட்டைக் குரலை உயர்த்தி எட்டுக் கட்டையில் இசைக்கிறார்.

இப்படி ததேகூகாரர்கள் கதம்ப கச்சேரியை நடத்திக் கொண்டிருக்க ஜனாதிபதியோ மாகாண அமைப்புக்கு பொலிஸ_ம் தரமாட்டேன் நில அதிகாரமும் தர மாட்டேன் வரி அதிகாரங்களும் கிடையாது எல்லா அதிகாரங்களும் கொழும்புக்கே என ஒரே முழக்கில் விடாது முரசறைகின்றார்.

அத்தோடு தனது முழக்கங்களுக்கு இசைவாக பாடல் இசைப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என பட்டயம் அறைந்து திருவிளையாடல் தருமிகளையே தனக்குத் துணையாக திரட்டிக் கொள்கிறார்.

கௌரவ ஜனாதிபதி மஹிந்த அவர்கள் என்னென்ன விடயங்களில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லை என்னும் அவரது பட்டியலில் உள்ள மூன்று விடயங்கள் தொடர்பாக மட்டும்தானா அவர் பிடிவாதமாக இருக்கிறார்! அல்லது

அவர் இன்னும் சொல்லாமல் இருக்கும் - இன்னும் பகிரங்கத்தி;ல் கிளப்பப்படாமல் இருக்கும் மேலும் பல விடயங்களிலும் அதிகாரங்களைப் பகிர அவர் தயாராக இல்லையா! என்பது யாருக்கும் தெளிவாக இல்லை. அவர் எந்தெந்த அதிகாரங்களைத் தரத் தயாராக இல்லை எனும் பட்டியல் அவ்வப்போது அவரது முரசுக்காரானால் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அவர் என்னென்ன விடயங்களின் மீதான அதிகாரங்களை என்னென்ன அளவில் அரசியற் தீர்வில் பகிரத் தயாராக இருக்கிறார் என்பதை அவரும் முழுமையாகச் சொல்கிறார் இல்லை – அவற்றை அவரிடம் யாரும் திட்டவட்டமாகக் கேட்பதாகவும் தெரியவில்லை. அவர் அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லை என்னும் பட்டியலில் உள்ள விடயங்களைத் தவிர ஏனைய எல்லா விடயங்களிலும் அவர் அதிகாரங்களைப் பகிரத் தயாராக இருக்கிறார் என்ற ஊக முடிவுக்கும் யாரும் வர முடியாது என்னும் குழப்ப நிலையே நிலவுகிறது.

தொடரும்..

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு!!!

Thursday, July 7, 2011
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் எதிர்வரும் வாரங்களில் சந்திக்கவுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்ஸ்தானிகர் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலிருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கமே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நாட்டுக்கிடையிலான உறவு மேலான்மையில் சிக்கல்களைத் தோற்றுவித்தாலும் மிகுந்த அவதானத்துடனேயே அவர் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி-1

Thursday, July 7, 2011
மஹிந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களில் எட்டுத் தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்த முடிந்து விட்டன.

பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தை,

அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி குறிக்கும் பேச்சுவார்த்தை,

பேச்சுவார்த்தைக்கான விடயங்களை அடுக்கி எழுதும் பேச்சுவார்த்தை

என பேச்சுவார்த்தையைப் பற்றியே அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளாக சுற்றிச் சுற்றி வாறாக.

படையப்பா பாசையில் சொல்வதானால், கயிறு கயிறா விட்டு அரசியல் விவகாரங்களைக் கடையிறதாகச் சொல்லுறாக.

ஆனால் எந்தக் கயிறையும் போட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எனும் வெண்ணெயைக் கடைந்தெடுப்பதில் இவர்களில் எவரும் அக்கறையோடு முன்னேறுவதென்ன ஈடுபடுவதாகக் கூடத் தெரியவில்லை.

மாறாக சிங்களவர்களின் காதில் சிறிலங்கா அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் காதிலும்

ஏமாளிகள் என்னும்; பூவைச் சூடி விடுவதற்கான முழு எத்தனிப்புகளோடு செயற்படுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இதில் வெறும் போக்கிலித்தனம் மட்டுமல்ல ஆற்றாமை, அறியாமை, புரியாமை, துணியாமை போன்ற பல பொல்லா ஆமைகளும் உள்ளடங்கியுள்ளன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த அவர்கள் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுடன்தான் தாம் கலந்தாலோசித்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணப் போவதாகக் கூறினார்.

இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் தம்மிடம் பெரும்பான்மை பலம் இல்லாததாலேயே தம்மால் பல அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதாகவும் கூறினார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்தவின் அணிக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியதோடு அவரோடு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் அரசியற் தீர்வை தமிழ்த் தலைவர்கள் எட்ட வேண்டும் என்னும் ஆர்வத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கணிசமான எண்ணிக்கையில் பாராளுமன்ற இடங்கள் பெற தமிழர்கள் வாக்களித்தார்கள்.

இலங்கை அரசை ஓர் அரசியற் தீர்வுக்கு முன்வரும்படி எவ்வளவுதான் நெருக்கடி கொடுத்தாலும் புலிகள் அழிக்கப்படாமல் இருக்கும் வரை அதில் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதுதான் இந்தியாவின் தீர்மானமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதனால் இலங்கை அரசு புலிகளை அழித்தொழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது இலங்கை அரசை வேறு எந்த நாடும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொண்டது.

அதுமட்டுமல்லாது இந்தியா தன்பங்குக்கு தற்காப்பு இராணுவ உபகரணங்களை இலங்கை அரசுக்கு தாராளமாக வழங்கியதோடு கடற்படை மற்றும் தகவல் உதவிகளையும் வழங்கி இலங்கை அரச படைகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பூரண வெற்றி கொள்ள வைத்தது.

இதுவே இன்று உலகம் புரிந்து கொண்டுள்ள உண்மை.

யுத்த காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிக் கேட்ட போது ஜனாதிபதி மஹிந்த அவர்கள் யுத்தம் முடிவடைந்ததும் உடனடியாக - நிச்சயமாக தான் ஓர் அரசியற் தீர்வை 13வது அரசியல் யாப்பு திருத்தத்தையும் விட உயர்ந்த பட்சமான ஒன்றை முன் வைக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கேட்ட போது, தமது இரண்டாவது தடவைக்கான ஜனாதிபதி;த் தேர்தலில் தான் வெற்றி பெற்றதன் பின்னர் நிச்சயமாக ஒற்றையாட்சி இலங்கைக்குள் திட்டவட்டமாக ஓர் அரசியற் தீர்வை தான் முன் வைக்க இருப்பதாகக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவரிடம் அரசியற் தீர்வு பற்றிக் கேட்டபோது அதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் பாராளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்ததும் இலங்கை மக்கள் அனைவரும் ஏற்கக் கூடியதோர் அரசியற் தீர்வை தேர்தலில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வகையாக உருவாக்கி நிறைவேற்ற இருப்பதாகக் கூறினார்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது பங்குக்கு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வைத் தாங்கள் பெற்றுத் தருவதற்கு வகையாக தமிழ் மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் தமக்கே வாக்களித்து தமது கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்.

இலங்கை மக்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் வகையாக அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்களை வழங்கினர்.

அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமக்குரிய பிரதான அரசியற் தலைமையை ஏற்க வேண்டும் என்னும் வகையாக வடக்கு கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பதினேழு தமிழர்களில் பதின்மூன்று பேர் ததேகூவினராக இருக்க வாக்களித்தனர்.

ஆனால்;, 2010 மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து பின்னர் மூன்று மாதங்கள் கழிந்த போதிலும் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

அப்போது அரசாங்கம் பகிரங்க அறிக்கைகளைத் தவிர நடைமுறையாக அரசியற் தீர்வுக்கான எந்தவொரு முன்முயற்சியிலும்; ஈடுபடுவதாக இருக்கவில்லை.

அதேவேளை ததேகூ காரர்களும் அரசாங்கத்தைத் திட்டுவதற்கப்பால் - அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்துவதை விட வேறெதிலும் அக்கறை காட்டவில்லை.

2010ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த அவர்கள் டெல்லிக்கு விஜயம் செய்தார்.

அதற்கு முதல் நாள் அவசர அவசரமாக ததேகூகாரர்களை அழைத்து விருந்தும் கொடுத்து தமிழர்களின் பிரச்சினை பற்றியும் சில நிமிட நேரம் கலந்துரையாடி இனிதாக அவர்களை வீPட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.

டெல்லி சென்று அவர் மீண்ட பின்னரும் எதுவும் நடக்கவில்லை.

பின்னர் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஸ்ணா இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அதற்கு முதல் நாளும் ஜனாதிபதி அவர்கள் அவசர அவசரமாக ததேகூகாரர்களை அழைத்து பழையபடி விருந்தும் கொடுத்து தமிழர் பிரச்சினைகள் பற்றி சில நிமிட நேரங்கள் கலந்துரையாடிவிட்டு அவர்களைஅவர்களது வீPடுகளுக்கு இனிதே வழியனுப்பி வைத்தார்.


இவற்றைத்தான் கடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது ததேகூக்காரர்கள் தமிழ் மக்கள் தம்மை பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் இடங்களில் வெற்றி பெற வைத்தபடியால்த்தான் அரசாங்கம் இறங்கி வந்து தம்மோடு பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்ததாகவும்,

எனவே உள்ளுராட்சித் தேர்தலிலும் தமக்கே வாக்களித்து அரசுடனான பேச்சுவார்த்தைக்கு தமது கைகளைப் பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

வடக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ் மக்களும் ததேகூவினர் மனம் குளிர அவ்வாறே வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் தமது வாக்குகளால் ததேகூகாரர்களின் அரசியற் கரங்களை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பலப்படுத்தியதால்தான் அரசாங்கம் பேச்சுவார்த்தை அரங்குக்கு இறங்கி வந்ததா?

அதனாற்தான், இந்த பேச்சுவார்த்தைச் சுற்றுச் சந்திப்புகள் நிறைவேறினவா?

அல்லது, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களின் காரணமாகத்தான் கடந்த சந்திப்புச் சுற்றுக்கள் நடந்தேறினவா?

என்ற ஆராய்ச்சி ஒரு புறம் இருந்தாலும்,

கடந்த ஆறு மாதங்களில் எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறியிருக்கின்றன, ஒன்பதாவது சுற்று பத்தாவது சுற்று என தொடரவும் உள்ளது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை சுற்றுக்களில் அரசியற் தீர்வுக்கான ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா!

அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடான வலம்புரி பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் கூறுவது போல

நடக்காத கலியாணத்துக்கு சீதனப் பேச்சுவார்த்தை நடப்பது போல” த்தான் அரசுக்கும் ததேகூவுக்கும் இடையில் ஊரையும் உலகையும் ஏமாற்றும் பேச்சுவார்த்தைச் சந்திப்பு நாடகம் அடிக்கடி அரங்கேற்றப்படுகிறதா!

என்பதைக் கண்டறிந்து தெளிவு பெற முற்படுவது அரசியல் சமூக அக்கறையுடையோருக்கு அவசியமான ஒன்றேயாகும்.

தொடரும்.

Tuesday, July 5, 2011

சில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை – ஜனாதிபதி!

Tuesday, July 5, 2011
சில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பளிப்பதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகளும் சில காவல்துறை உத்தியோகத்தர்களும் தேசிய கீதத்திற்கு உரிய கௌவரம் வழங்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் உரிமை மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக விழுமியங்களும் தேசப்பற்றும் சிறு பராயத்திலேயே பயிற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஊடாக மேற்குலக கலாச்சாரத்தை பார்த்து பழகியுள்ள நாம் அதற்கு அடிமையாகி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் மொழி உசிதமானதல்ல எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது சில அரசியல்வாதிகள் அதற்கு ஏற்றவாறு நடனமாடுவதாகவும் தாம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி அரசியல் கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்!

Tuesday, July 5, 2011
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வடபகுதி அரசியல் கட்சிகளுக்கான சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என கொஃபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நிலைமை காணப்படாமை துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாகவும் கொஃபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய ஒன்பது முறைப்பாடுகள் இதுவரை தமது அமைப்புக்கு கிடைத்துள்ளதாக கொஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.

இதில் அனேகமானவை வடமாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்கில் கேகாலை மாவட்டத்திலேயே அதிகளவிலான தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் அமைதியான சூழல் காணப்படுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ராசங்க ஹரிஸ்சந்திர கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 17 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளில் அமைதி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பாதிவாகியுள்ளதெனவும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை சட்ட விரோதமாக காட்சிப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ராசங்க ஹரிஸ்சந்திர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபா சன்மானம்!

Tuesday, July 5, 2011
மட்டக்களப்பு புத்தூர் பகுதியில் உள்ள அர வங்கியொன்றில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவலை வழஙட்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானத்தை வழங்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளஙக்கக்கோன் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்கள் 011 2 32 01 45 அல்லது 011 2 42 21 76 அல்லது 011 2 38 03 80 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்களை பெற்றுக்கொடுப்போரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதாகவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி குறிப்பிட்ட அரச வங்கிக்குள் நுழைந்த ஆயுதமேந்திய சந்தேகநபர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

Followers

Blog Archive