Wednesday, April 7, 2010

WEDNESDAY, APRIL 07, 2010




WEDNESDAY, APRIL 07, 2010


எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க செல்லுங்கள்
எந்தவிதமான அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் வாக்களிக்கச் செல்லுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு திட்டமிட்ட படி உச்ச கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலின் போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்க பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையா ற்றுகையில், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கு இணங்க அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வழங்குவர்.
தேர்தல் சட்ட விதிமுறைகளை பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கண்டிப்பாக அமுல்படுத்தத் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அதன் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பாதுகாப்பு கடமையில் 58 ஆயிரத்திற்கு அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக 19,800 முப்படையினர்கள் மற்றும் 2 ஆயிரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் காலத்தின் போது பாரிய அசம்பாவிதங்களோ வன்முறைச் சம்பவங்களோ இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர் இதுவரை 298 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பட்டார்.
298 முறைப்பாடுகள் தொடர்பாக 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 206 பேர் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் சகல பொலிஸ் நிலையங்களையும் அண்மித்த பகுதியில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இதன் மூலம் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க முடிவதுடன் ஆயுதங்களுடன் நடமாடுபவர்களை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்

WEDNESDAY, APRIL 07, 2010

முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களில் கண்காணிப்பாளருக்கு அனுமதி

பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் முதற் தடவையாக அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல்கள் கண்காணிப்பு பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
தேர்தல்களை வாக்குச் சாவடிகளுக்குள் இருந்தபடி கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் இவ்விரு ஸ்தாபனங்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே.
இதேவேளை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியின் வரையறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஹெட்டியாராச்சி கூறினார்.
தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியில் 24 பேர் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 22 பேர் மாவட்டத்திற்கு ஒருவர் படியும், இருவர் தேர்தல் செயலகத்திலும் பணியில் ஈடுபடுவர்.

Followers

Blog Archive