Friday, May 21, 2010

நிவாரணப் பணிகளில் கடற்படையினர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 300 படகு ஓட்டுநர்களைக் கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் 30 குழுக்களாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் கூறினார்.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாரவிலை ஆகிய பகுதிகளில் கடற்படைப் படகோட்டுனர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடற்படைக்குச் சொந்தமான 28 படகுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்து ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்கிறார் அமைச்சர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடிந்தோடியதன் பின்னர் இந்த நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையெனச் சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் இது உண்மையல்லவெனவும் அவர் சொன்னார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் பௌசி கூறினார்.
அத்துடன் நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 25 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதெனவும் மேலும் 55 மில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் உள்ளதாகவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.
முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து அமைச்சிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாமென அமைச்சர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மூன்று கட்டங்களாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரினா மொஹமட் கூறினார்,
இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர்களும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

Followers

Blog Archive