Monday, March 29, 2010

யாழ் மாவட்ட பெருமக்களே! உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!--MONDAY, MARCH 29, 2010

எமதினிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே!உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!
எமது அன்பின் தோழரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான தோழர் சிறீதரன் அவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரிய வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மெழுகுதிரி சின்னத்துக்கு நேரே உங்கள் புள்ளடிகளை இடுவதோடு தோழர் சிறிதரன் அவர்களின் இலக்கமான 6 க்கு மேலேயும் உங்கள் புள்ளடிகளை இடுங்கள் என வேண்டிக் கொள்கிறோம்.
தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் தமது மாணவபிராயத்திலிருந்தே தமிழர்களின் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் உழைத்து வருபவர். இதனால் அவரது உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்ததுடன், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு ஆண்டுகாலமாக இராணுவக் கொத்தளங்களிலும் வெலிக்கடையிலும் சிறைவாசம் அனுபவித்தார். இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும் சிறைவாசக் கொடூரங்களுக்கும் உள்ளானார்.
தாம் கொண்ட கொள்கையில் உறுதியான தோழர் சிறிதரன் அவர்கள் மரணத்தின் வாயில்களைக் கண்டபோதிலும் தாம் தொடங்கிய இலட்சியப்பாதையில் பேராபத்துக்களின் மத்தியிலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய அணிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் எப்போதும் கண்ணியமாகவும் கனவானாகவும் நடந்து வந்துள்ள பண்பாளர். பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகாத உறுதியான நெஞ்சமும் நேர்மையான நடத்தையும் கொண்ட போராளி அவர்.
1970களின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கிய சிறிதரன் அவர்கள் “ஈழ மாணவர் குரல்” என்னும் எழுச்சிப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலும் ஈழமுழக்கம், செந்தளம் மற்றும் செந்தணல் ஆகிய வெளியீடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கண்ணோட்டம் பத்திகையின் ஆசிரியராகவும் அரசியல் எழுத்துப் பணியாற்றி வருகிறார். அவர் அயராத அபாரமான எழுத்தாளர். கட்சித் தோழர்கள் மத்தியில் உதாரண புருஷனாகவும் ஆற்றல் மிக்க ஆசானாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை வழி நடத்தும் ஒரு புரட்சிகரத் தலைவனாக அவர் செயற்பட்டு வருகிறார்.
ஈழத் தமிழர்கள் சுயாட்சி கொண்ட அதிகாரப் பகிர்வைப் பெறவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும், தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஜனநாயக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்து தளங்களிலும் அயராது அஞ்சாது உழைத்து வருபவர்.
அரசியல் உரிமைக்கான போராட்டமும் சமூகத்தில் நிலவும் சாதிகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான போராட்டமும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான பற்றுறிதி கொண்டு செயற்பட்டு வருபவர். 1980களில் “தட்டுகளில் உணவும் சிரட்டைகளில் தேனீரும் வேண்டாம்” என்ற கோஷங்களுடன் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கியவர்.
தமிழர்கள் மத்தியில் சாதிகளின் பேரிலுள்ள கொடூரங்களை ஒழிப்பதற்கு சிறுப்பிட்டி மத்தாள் ஓடை போன்ற இடங்களில் மக்கள் முன்னணிகளை அமைத்து நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் கூலிப்போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அதற்காக கிராமங்கள் தோறும் ஓய்வு உழைச்சலின்றி உழைத்தவர், அவ்வாறு உழைத்துக் கொண்டிருந்த கிராமிய முன்னணிகளோடு சேர்ந்து நின்றும் செயற்பட்டவர்.
இப் போராட்டத்தின் ஒரு அங்கமாக கூலிவிவசாயிகளும் மாணவர்களும் இணைந்து ‘ஜனசக்தி’ எனப் பெயரிடப்பட்ட சவர்க்காரங்களைத் தயாரித்து விற்பனை செய்து கூலிவிவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார்.
தோழர் சிறிதரன் அவர்கள் தமிழர்கள் மத்தியிலுள்ள சக்திகள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியிலும் இந்தியத் தலைவர்கள் மத்தியிலும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் முன்னேற்றங்களுக்கும் தோழர் சிறிதரன் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாகவும் பொறுப்பான தலைவனாகவும் சந்தர்ப்பவாதங்களுக்கு இடமளிக்காது தொடர்ந்து போராடும் சிறந்த போராளியாகவும், காலம் சூழல் அறிந்து அதற்குத் தக்கபடி மக்களின் நலன்கனை முன்னிறுத்தி உரியமுறைகளிற் செயற்படும் செயல்வீரனாகவும் இருப்பார் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
யாழ்ப்பாண வாக்காளப் பெருமக்களாகிய நீங்களும் இந்த நம்பிக்கைகளோடு நல்ல தலைவனான, சிறந்த தோழனான, அறிவார்ந்த சிந்தனையாளனான, உறுதியான போராளியான தோழர் சிறிதரன் (சுகு) அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்களின் பாராளுமன்றப் பிரதிநிதி ஆக்குமாறு உங்களை நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
முதலில் மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிஅதே வாக்குச் சீட்டில் கீழேயுள்ளதோழர் சிறிதரனின் இலக்கம் 6 க்கும் உங்கள் புள்ளடி
வேண்டுவோர்:ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள்,அத்துடன் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் அன்புத் தோழர்கள் நண்பர்கள்.

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார்-MONDAY, MARCH 29, 2010

நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.
அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.
மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன்.
அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம். இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.
இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

MONDAY, MARCH 29, 2010 சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Followers

Blog Archive