Sunday, February 13, 2011

யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்!

Sunday, February 13, 2011
யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரை, யாழ் பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கு இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையில் உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையே புரிந்துணர்வுகளை வளர்ப்பதன் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும், இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் கடற்றொழிலாளர் சங்க சமாசத் தலைவர்கள் கூட்டாக இணைந்து, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிக்கடி குடாநாட்டுப் பரப்புக்குள் பிரவேசிக்கின்ற இந்திய றோலர்களாலும், குடாநாட்டில் குருநகர் உள்ளிட்ட சிறு பிரதேச கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற றோலர் தொழிலாலும், குடாநாட்டுக் கடல்வளம் அழிவதோடு தொழிலாளர்களின் வலைகளும் நாசமாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Sunday, February 13, 2011
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது. இவற்றில் இரண்டு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய அரச நிறுவனமான 'கெய்ன் இந்தியா' என்ற நிறுவனத்துக்கே இந்த பகுதி ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றன

ஏனைய ஐந்து பகுதிகளையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பகுதியில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபடவுள்ளன. இதற்கென ஆழ்துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அது சார்ந்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது

தமிழக தேர்தல்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும்?.

Sunday, February 13, 2011
தமிழக சட்ட சபை தேர்தல்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் சில உறுப்பினர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.

ஊடுறுவிய புலி உறுப்பினர்கள் மறைவிடமொன்றில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் குறித்த புலி உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளின் நிதி மற்றும் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் சென்னையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலைப் போராளிகள் இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் ஊடுறுவியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, தமிழகத்தில் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கிடையாது என மாநில காவல்துறை ஆணையர் லத்திக்கா சரண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எச்சரிக்கை அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Followers

Blog Archive