Friday, January 28, 2011

தொடரும் குற்றச் செயல்களை தடுக்க இராணுவம் ரோந்துயாழ். இராணுவத் தளபதி அறிவிப்பு.

Friday, January 28, 2011
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காக குடாநாடு முழுவதும் இன்று முதல் இரவு இராணுவ ரோந்து நடைமுறைக்கு வருகின்றது என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுறுசிங்க அறிவித்துள்ளார்.

அவர் யாழ்ப்பாண செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

கலந்துரையாடலில், வட பிராந்திய பதில் பொலிஸ் மா அதிபர் சுசில் பெரேரா தகவல் தருகையில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் குற்றச் செயல்களை தடுக்க மூன்று அம்ச செயல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாதாரண உடை தரித்த பொலிஸாரும் பொலிசாரும் இரு பிரிவுகளாக மக்களிடமிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெற்று 24 மணித்தியாலத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தரங்க தகவல்களை தமிழில் வழங்க பொலிஸ் நிலையங்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதி சோதனை, வாகன சோதனை, சந்தேகமானவர்களை விசாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.

நீதி நேர்மையான தேர்தலுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்-பிரதமர் டி. எம். ஜயரட்ன.

Friday, January 28, 2011
நீதியும், அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கு சகல அரசியல்வாதி களும் கட்சித் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரட்ன கேட்டுக்கொண்டார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் விருப்பத்திற்கு இடமளித்து வன்முறை, ஊழல் மோசடியற்ற தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் பிரதமர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமோக வெற்றியீட்டுவது உறுதி எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்ட போதும் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் அதனால் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், கண்டியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதியமைச்சர் அப்துல் காதர் போன்றோரின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைப்பது நிச்சயம். குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் எந்த குறையும் இருக்காது எனவும் பிரதமர் தெரிவித்தார்

Followers

Blog Archive