Tuesday, June 5, 2012

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் விளக்கம்!

Tuesday, June 05, 2012
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கப் பணிகள் குறித்து இரு நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றின் போது இந்திய மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோர் இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஏ.கே. ஆன்டனி மற்றும் அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் மார்டீன் டெம்ஸ்கீ ஆகியோரை இலங்கைப் பிரதிநிதிகள் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கைப் படையினருக்கு எதிர்காலத்தில் பயிற்சிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரு நாட்டு பிரதிநிதிகளிடமும், பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் இரு நாடுகளும் சாதகமான பதிலை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கைக்குள் பிரவேசித்த சனல்-4 ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான சிராணி சபாரட்னம் நாடு கடத்தப்பட்டார்!

Tuesday, June, 05, 2012
இலங்கைக்குள் பிரவேசித்த சனல்-4 ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான சிராணி சபாரட்னம் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளரின் கணவரும், சனல்- 4 ஊடகத்தின் பணிப்பாளருமான ஸ்டுவர்ட் கொஸ்ரேவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த இருவரும் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கறுப்புப் பட்டியல் இடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் குறித்த இருவரையும் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்துவதற்கு முன்னர் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிரானி சபாரட்னம் ஏழரை மணித்தியாலங்கள் நாட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி அவர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் வெவ்வேறு பெயர்களில் குறித்த பெண் ஊடகவியலாளர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.

Followers

Blog Archive