Thursday, October 21, 2010

யாழில் வெறுமனே கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு.

Thursday, October 21, 2010
யாழ்க்குடாநாட்டிலும் சரி வடக்கிலும் சரி அரச அதிகாரிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்புகளை வழங்காது வெறுமனே கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக இன்று வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்தக் கடுமையான சீற்றத்தை வெளியிட்டிருந்தார். அண்மையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் திறக்கப்பட்டிருந்தது. பெரும் சர்ச்சைகள் மத்தியில் இரண்டே இரண்டு வகுப்புகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வகுப்புகள் உரும்பிராயிலுள்ள தற்காலிக தனியார் காணியிலேயே இயங்கி வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது இந்தப் பாடசாலைகள் திறக்கப்பட்டு தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. அவ்வேளையில் சில புகைப்படங்களை காண்பித்த ஜனாதிபதி குறித்த பாடசாலை முழுமையாக திருத்தப்படவோ அல்லது சீர் செய்யப்படவோ இல்லையெனவும் விளம்பரங்களை தேடும் வகையில் நீங்கள் விழாக்களை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதாக தனக்கு முறைப்பாடுகள் வந்து கொண்ட வண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் இந்த நிகழ்வில் கத்துரசிங்க போதிய ஒத்துழைப்பு வழங்காத நிலையில் ஜனாதிபதியின் இந்தக் குற்றச்hட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அரச அதிகாரிகள் தொடர்பாக தனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கில் தனக்கு போதிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி தனது சீற்றத்தை வெளியிட்டிருந்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குப் பாராட்டு.

Thursday, October 21, 2010
இலங்கையின் பொருளாதாரம் சிறந்த வளர்ச்சியைக் காட்டுவதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் குறுங்காலப் பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அறிவித்துள்ளது.

தற்போதைய சாதகமான சூழல், எஞ்சியுள்ள பொருளாதாரச் சவால்களை முறியடிப்பதற்கும் தனியார் துறை வளர்ச்சிக்குமான உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குத் தொடர்ச்சியான மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவிலான நேர்த்தியான சந்தை முதலீடுகள் மற்றும் முன்னேற்றகரமான வர்த்தகச் சூழல் என்பவற்றின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்துத் திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகை மற்றும் பொதுக் கடன்களை உடனடியாகக் குறைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான செலவீனத்தையும் குறைக்க வேண்டுமென நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூகச் செலவீனம், மீள் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புக்கான முதலீடுகளுக்காக அரச வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நன்கு திட்டமிடப்பட்ட வரி முறைமையை அதிகாரிகள் சமர்ப்பிக்க முன்வர வேண்டுமென்றும் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு குறிப்பிட்டுள்ளது.

சாதகமான பொருளாதார மறுசீரமைப்பு கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய திறவுகோலாக இலங்கையின் 2011 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் அமையுமென நம்புவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றும் குழு மேலும்தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐநாவுக்கு.

Thursday, October 21, 2010
ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு நாளை அல்லது நாளை மறுதினங்களில் தமது அறிக்கையை சமர்பிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படங்களை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். செனல் 4 காட்சிகள் தொடர்பான பொய்த் தன்மையை ஏற்கனவே நாங்கள் உலக அளவில் தொழிநுட்பத்தில் பிரசித்திப் பெற்றவர்களை வைத்து நிரூபித்துக் காட்டினோம். அவர்களுக்கு சவாலும் விடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை அந்தச் சவாலை பொறுப்பேற்கவில்லை.

அதனால் அது தொடர்பில் நான் அதிகம் கதைக்க விரும்பவில்லை. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் இலங்கைத் தொடர்பான தீய நோக்கங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இலங்கையை அவர்களுடைய கை பொம்மைகளாக மாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததன் காரணமாக இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். எனக் கூறினார்.

Followers

Blog Archive