Sunday, June 13, 2010

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது தமிழகம்,

Sunday, June 13, 2010

தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.

இதற்கேற்றாற் போல், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மலைக்கோட்டை ரயில் இப்பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைதி கலாசாரம் என்று இருந்த நிலை மாறி, ஆயுதக் கலாசாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீஸ�க்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல் துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது.

போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவைதான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக, சட்ட விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடருமேயானால், சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும்.

எனவே, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து, விரைந்து செயல்பட்டு, தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive