Saturday, November 20, 2010

சமாதானமில்லாத இடத்தில், அபிவிருத்தியினை எதிர்பார்க்க முடியாது – ஜனாதிபதி:

Saturday, November 20, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்பகல் 10.16 அளவில், தமது இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமானத்தை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற முன்றலில் செய்துக் கெணர்டார்.

இந்த சத்தியப் பிரமாணம் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா முன்னிலையில் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக விசேட மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பிரமுகர்களும் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்களும், அதனைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, சமாதானம் இல்லாத இடத்தில், அபிவிருத்தியினையும், அபிவிருத்தி இல்லாத இடத்தில், சமாதானத்தையும், எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.

இது தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன, அரசியல் தீர்வின் ஒரு கட்டமாகவே தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

வன்முறைகளில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு விடுவிக்கப்பட்டு, தற்போது சமதானம் நிறைந்த பிரதேசமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விரைவில் வடக்கு மக்களுக்கான பிரதேச சபை, நகரசபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தமது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுதந்திரமானதும், நீதியானதுமான நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒரே கொடியின் கீழ் ஐக்கியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே வேளை, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் தமது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive