
வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோகமான வெற்றிவாய்ப்பு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முப்பது வருடங்களாக எவ்விதமான அபிவிருத்தியையும் கண்டிராத அப்பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக இறுதியுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் தற்போது என்றுமில்லாதவாறு அபிவிருத்தி கண்டு வருகிறது. இதன் காரணமாக வடக்கில் இடம்பெறும் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆளும்கட்சி அமோக வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களை சகலவிதமான அடிப்படை வசதிகளுடனும் மீளக்குடியமர்த்திவரும் அரசாங்கம், வடக்கில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், மீன்பிடி உட்பட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து வருகிறது.
தேர்தலை முன்னிட்டே அரசாங்கம் இவ்வாறு செய்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய சிறுகட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்ற நிலையிலும் மக்கள் அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
ரசாங்க அமைச்சர்கள் பலரும் நேரடியாகத் தமது பகுதிகளுக்கு விஜயம்செய்து தமது தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளை உடனடியாகவே வழங்கிவருவது இப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
புலிகள், ஆயுதப் போராட்டம் என்று முப்பது வருடங்களாகத் தமது வாழ்க்கையைத் தொலைத்துநிற்கும் வடபுல மக்களுக்கு அரசாங்கம் இன்று மேற்கொண்டுவரும் அபிவிருத்தியானது யுத்தத்தில் இழந்துபோன அனைத்தையும் மீள வழங்குவதாகவே அமைந்துள்ளது.
இதன் காரணமாக வடபுல தமிழ் மக்கள் அரசாங்கத்தின் ஆளுங்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். இது வடக்கில் போட்டியிடும் இன்றுமொரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக உள்ளது.
இதனால்தான் தமிழ்க் கூட்டமைப்பினர் மக்களிடையே அனுதாப அலையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்துவதாகவும், பிரசாரத்தில் ஈடுபடும் தமது வேட்பாளர்களை இனம் தெரியாதோர் தாக்குவதாகவும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் இவர்களது பொய்ப்பிரசாரத்திற்கு சோரம் போவதாக இல்லை. எனவேதான் ஆளுங்கட்சிக்கு வலுவான மக்கள் ஆதரவு இருந்துவருவதாக அவதானிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment