Tuesday, September 20, 2011

இலங்கை இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி திருமலையில் ஆரம்பம்!

Tuesday, September 20, 2011
பல பாதுகாப்பு பொறிமுறைகளை மையப்படுத்திய கூட்டுப் போர் பயிற்சிகளில் இலங்கை இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளதுடன் இந்தியாவி ன் 6 போர்க் கப்பல்கள் இலங்கையின் கிழ க்கு கடற்பரப்பிற்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான அனைத்து தாக்குதல் படகுகள் போர்க் கப்பல்கள் மற்றும் விசேட ரோந்துப் படகுகள் மேற்படி கூட்டுப் பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கிழக்கு கடல் பாதுகாப்பு மையத்தின் கட்டளை தளபதி ரியல் அட்மிரல் பிஸ்ட் மேற்படி கூட்டுப் பயிற்சிகளை வழி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கடற்படை பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் நேற்று முதல் தொடர்ந்தும் ஐந்து நாட்களாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இப் பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் இந்திய கடற்படையுடன் இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்ட போதிலும் தற்போது நடைபெறும் பயிற்சியானது சற்றுக் கடினமானதுடன் பரந்தளவிலானதாகும்.

ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சி, புலனாய்வு பயிற்சிகள் கூட்டு ரோந்து நடவடிக்கைகள், தாக்குதல் நடவடிக்கைகள், ஆழ்கடல் மற்றும் கடலடிப் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன தொடர்பாக பாரிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இக் கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் இரு நாட்டின் வீரர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கூற முடியாது எனக் கூறினார்.

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்!

Tuesday, September 20, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி நேற்று மாலை நிவ்யோர்க் நகரை அடைந்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கொஹொன மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமர்வின் பொது சபை அரச தலைவர்களின் உரைகள் எதிர்வரும் 22 ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றன

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனால் உலகப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பல நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் பொருட்டு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நியூயோர்க் சென்றிருந்தனர்.

நியூயோர்க்கை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.

தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன!

Tuesday, September 20, 2011
நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவு, பங்களாதேஸ், அல்ஜீரியா, கியூபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தாரூஸ்மான் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Followers

Blog Archive