
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment