
கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் அசோக என் டி சில்வா தலைமையில் காமினி அமரதுங்க, கே ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக மனுதாரர் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்குமாறு ஜெனரல் பொன்சேகா சார்பில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஜெனரலைக் கடந்த சில நாட்களாகச் சந்திக்கமுடியாமல் போனதால் உரிய பதிலை வழங்கமுடியாமல் போனதாக ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கிணங்க ஜெனரல் பொன்சேகா சார்பில் விடயங்களை முன்வைப்பதற்காக மூன்றுவார கால அவகாசத்தை உயர்நீதிமன்றம் வழங்கியது.
சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கூடிய விரைவில் தம்மை விடுவிக்குமாறு பொன்சேகா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுமீதான விசாரணை ஜூலை மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment